Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Saturday, July 4, 2015

அண்ணல் மாண்புமிகு சவரீசன் அவர்கள்

சவரீசன். நாகர்கோயில் பக்கமோ, திருநெல்வேலி பக்கமோ இருந்தால் இந்த பெயரை அறிந்திருக்க வாய்ப்பு உள்ளது. சமீபத்தில், ஏதேனும் பத்திரிகையிலும் படித்திருக்கலாம். இந்த பெயரை ஆங்கிலத்தில் (Savareson) தான் முதலில் படிக்க நேர்ந்தது. அப்போது சவரேசன்  என்று இதைப் படித்து 'என்ன டா பேரு இது' என்று நினைத்துக் கொள்வேன். “சவரீசன்” என்று தம் பெயரை சரியாக படிக்க, மாண்புமிகு சவரீசன் அவர்களே இதை சொல்ல வேண்டி இருந்தது.

செப்டம்பர் மாதத்தில் திருச்சி NIT இல், Festember என்கிற கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எங்கள் கல்லூரியில் இருந்து நாங்கள் ஒரு 15 பேர் சென்றிருந்தோம். அப்பொழுது கமல்ராஜூம் நானும் தான் டீம் என்று பேசிக்கொண்டு தான் போனோம். அங்கே சென்ற உடன், சவரேசனும் நானும் ஒரு டீம் என்று சொல்லி விட்டார் எங்கள் தலைவர். 'யாரு டா இவன் சவரேசன் ?' என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அன்றே அந்த அரை இருட்டில், NIT-இன் தெருவிளக்கின் நடுவில் தான் சவரீசனை முதல் முறையாக அறிமுகத்துடன் சந்திக்கிறேன்.

அடுத்த நாள், எல்லா கேள்விகளுக்கும் சவரீசனே பதிலளித்ததும், ஒரே சுற்றில் பல புள்ளிகள் எடுத்து நாங்கள் வெற்றி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படியாக அந்த போட்டிகளின் போது தான் எங்கள் நட்பு தொடங்கியது. சவரீசன் ஒரு அறிவுப்பசி மிகுந்த ஜன்மம். பஜ்ஜி சாப்பிட்டால் கூட அதை மடித்து தரும் காகிதத்தில் ஏதேனும் செய்தி உள்ளதா என்று படித்துப்பார்த்து தான் குப்பையில் போடுவான். அந்த வருடம் சில கல்லூரிகளில் நடக்கும்  "Tamil Quiz" போட்டிகளில், நாங்கள் தான் வின்னர்ஸ். பதினெட்டு பாகங்களாக பாடப்படும் நூல் 'கலம்பகம்' என்பது மட்டும் தான் நான் எப்பொழுதோ சொன்ன ஞாபகம் இருக்கிறது.

மிகவும் தீவிரமாக ஆனந்த விகடன், தினத் தந்தி, தி ஹிண்டு  படிப்பதில் இவரை மிஞ்சுபவர் என் வட்டத்தில் யாருமில்லை. 'சாமி' படத்தில் 'கோட்டா சீனிவாச ராவ்' சொல்வது போல, "தினம் 2 நியூஸ் பேப்பர் படிக்கிறேன்" லிஸ்ட் ஆளு இவரு. தினமும் 2 மணி நேரம் செய்தித்தாள் வாசிப்பார்.

வேலைக்கு சேர்ந்த புதிதில் சவரீசனோடு தான் தங்கி இருந்தேன். தினமும் ஆபிசுக்கு சைக்கிளில் தான் போக்கும் வரவும். நான் அப்போ அமைந்த சில பெரிய இடத்து நட்புகளால், 'Philharmonic Orchestra', 'Led Zeppelin' என ஐந்து பாடல்கள் கேட்டுக்கொண்டு சைக்கிள் ஓட்டிக்கொண்டு போவேன். அதே ஐந்து பாடல்களை தான் இரண்டு மாதங்கள் திரும்ப திரும்ப கேட்டேன். காலையில் ஒன்றாக தான் சாப்பிட செல்வோம். அங்கே அப்போதெல்லாம் ஒரு இட்லி இரண்டு ரூபாய் இருந்ததாக ஞாபகம். வெளுத்து வாங்குவோம்.

அப்படி தான் பல விஷயங்கள் பகிர தொடங்கியதும், "சில நேரங்களில் சில மனிதர்கள்" தொடங்கி "மாலதி டீச்சர்" வரை எல்லாம் படித்ததும். அந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு நான் மைலாப்பூருக்கு மாறி விட்டேன். சவரீசனுக்கு இன்னும் ஒரு மாத மென்பொருள் பயிற்சி பாக்கி இருந்தது. வீடு மாறிய பொழுது நான் அவர்களோடு செல்லவில்லை. நான் வேறு ஒரு குரூப்போடு சென்றுவிட்டேன். ஆனால், வெள்ளிக்கிழமை ஆகிவிட்டால், சபரி, சிவா, பிரபு, GS, நான் - ஐந்து பேரும் இரவு முழுவதும் ஏதேனும் பேசிக்கொண்டு உட்கார்ந்திருப்போம்.

இந்த குழுவுக்கு நாங்களே வைத்துக்கொண்ட பெயர், "மொட்டை மாடி இலக்கியக் குழு". சென்னையில் இருந்த நாட்களின் சாதனைப் பட்டியலில், இதை வாராவாரம் கூட்டியதையும், பேசித் தீர்த்ததையும் சேர்த்துக்கொள்ளலாம். ஏதேதோ பேசி பேசி, ஏதேதோ யோசித்து யோசித்து, நல்ல வருங்கால இந்தியாவை வடிவமைப்பதாக எண்ணி, நாங்கள் பேசாத தலைப்புகள் இருக்காது என்றே நினைக்கிறேன். அரசாங்கம், வரலாறு ஆகிய தலைப்புகளில் சவரீசன் பின்னி எடுப்பார். நமக்கு தெரியாத பெயர்களாக சொல்லுவார்.  நாங்கள் "ஆஆஆ..." என்று பார்ப்போம்.

சவரீசனிடம் இருக்கும் கெட்ட பழக்கம் இந்த இரவு கூடும் குழுவிற்கு வந்ததும், ‘பாப்புலர்' பாடல்களை போட்டு விடுவது. “Why this kolaveri”, “என்றென்றும் புன்னகை" போன்ற இரவு நேரத்திற்கு சற்றும் உகந்ததல்லாத பாடல்களை மட்டுமே போடுவார். இங்கே பிரபு வாழ்க்கையின் சுவாரசியங்களை அறுவை சிகிச்சை மூலம் பிரித்து, சாலையில் நடந்து செல்லும் எந்தவொரு பெண்ணிற்கும் மனதில் என்னென்ன எண்ணங்கள் ஓடும் என்பதை சொல்லிக்கொண்டிருப்பார். ஹெட்செட் வேறு மாட்டிக்கொண்டு, கணினி திரையை பார்த்து சிரித்துக்கொண்டிருக்கும் சவரீசனை கடுப்பாகி கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்ப்போம்.



சவரீசனும், சிவாவும், நானும் நான் கேமரா வாங்கிய புதிதில் ‘மந்திரகிரி மகாயுககாளி காமந்திஹாதேவி’ கோவிலுக்கு சென்றோம். பெயரை சொன்னால் சட்டென்று புரியாது. இது தாம்பரத்திற்கு மிக அருகில், சானடோரியத்தில் தான் இருக்கிறது. சனிக்கிழமை மாலை போகலாம் என்றிருந்த கோவிலுக்கு இழுத்தடித்து ஞாயிறு காலை சென்றோம். இப்படி ஒரு இடம் சென்னையிலா என்பது போல அமைதியாக, அதிகாலை குளிருடன் இருந்தது அந்த மலைக்கோவில். சவரீசன் பொதுவாக மகிழ்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். அவர் மலை மேல், சமவெளியை பார்த்து கையை விரித்து இயற்கையை ரசிக்கும் புகைப்படம் ஒன்று இருக்கிறது. வெகு அரிய புகைப்படங்கள் பக்கத்தில் என்றாவது ஆனந்த விகடனுக்கு அனுப்ப வேண்டும்.

வீட்டிற்கு சென்றால், மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று, வடக்கு பக்கமாக நாற்காலியை திருப்பிபோட்டுவிட்டு, காலை தூக்கி திண்டில் வைத்து அமர்ந்து கொள்வார். “இப்போ சொல்லு…”, என்று அவர் சொன்ன பின் நீங்கள் ஒரு மணி நேரம் பேசினாலும் ஒரு வார்த்தையை விடாமல் திருப்பி சொல்வார்.

அதன் பின்னர், முன்னரே தீர்மானித்தது போல, சவரீசன் அரசாங்க வேலைக்கு படிக்க துவங்கி விட்டார். தாறுமாறாக தயாராகிக்கொண்டிருந்தார். "நடிச்சா ஹீரோ தான்" என்கிறார் போல "எழுதின குரூப் 2 தான்" என்று கம்பீரமாக TCS-இல் இருந்தார்.  குரூப் 2 தேர்வில் தமிழகத்தில் 300-ஆம் இடத்திற்குள் வந்து இப்பொழுது பச்சை Ink  கையெழுத்து போடும் அளவுக்கு பெரிய வேலை செய்கிறார்.

இப்போழுதும் தொலைபேசியில் அழைத்தால் அரை மணி நேரம் பேசுவார்.  இன்றும் காலையில் “என்ன தலைப்பில் எழுதுவது?” என்று கேட்டேன். “என்னை பற்றி புகழ்ந்து எழுதேன்?” என்றார். ‘சரி’ என்றதற்கு, “வேண்டாம். நீ அசால்ட் சேதுவ அழுகுணி சேதுவா எழுதிடுவ” என்று கூறினான். அப்படியா எழுதி உள்ளேன்???

இன்றளவிலும் இந்த ‘பாப்புலர்’ விஷயங்களை மட்டுமே பேசுவார். நாங்கள் அனைவரும் டாகுமெண்டரி பற்றி பேசிக்கொண்டிருந்தால், இவர் மட்டும் “எந்த ஹெல்மெட் வாங்குறது. ஆன்லைன்ல ஆர்டர் பண்ணலாமா?” என்பார். இப்படியும் மக்கள் இருக்கிறார்கள். ஆனால், இன்றளவும், “அரசாங்கத்தோட நேரடி தொடர்பு வச்சுருக்கோம்" என்று நாங்கள் மார்தட்டிக்கொள்ள காரணமாய் இருப்பவர், அண்ணல் மாண்புமிகு சவரீசன் அவர்கள் தான்.

பி.கு. புகைப்படங்கள் ஆர்டரின் பேரில் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படலாம்.

Friday, November 15, 2013

நினைவுகளை மறப்பவன்

காலை நான்கு மணி இருக்கும் உன்னை தேட ஆரம்பித்த பொழுது. நியான் விளக்குகளுக்குள் அமர்ந்து கணினி திரையை நான்கு மணி நேரம் பார்த்தவனுக்கு கசக்கிக்கொண்டு கண்களை திறக்க வேண்டாமல் தூங்க தோன்றி சில நிமிடங்கள் ஆகி விட்டன.

தேடுதல் என்ற சொல்லுக்கு இன்னொரு பொருள் இருப்பதை சொல்லித்தந்ததே நீ தான். இங்கே தான் இருக்கிறாய் என்றில்லாமல் இருக்கும் ஒருவரை, நினைவால் தேட யார் பழக்கி விட்டார்கள் என்று தெரியவில்லை. நினைவுகளால், தேவைகளால் வார்த்தைகள் உருவானதா? இல்லை வார்த்தைகளுக்காக தேவைகளா??? செயல்களைத் தூண்டுவன சொற்களா? இல்லை, செயல்கள் மூலம் சொற்கள் உருவானதா?

பயம் அப்படித் தான். அடி. அப்படி தான். யாரையும் அடிக்காமல் வளரும் குழந்தைக்கு அடி என்ற விஷயத்தை அறிமுகம் செய்வதே நாம் தான். அடி என்ற பதம் தெரிந்ததால் செயலா? இல்லை, செயலால் அந்த பெயரா? வன்முறை ஆரம்பத்தில் இருந்ததா? கீழே விழுந்த குழந்தையை உற்று கவனித்திருக்கிறாயா? யாராவது கத்தினாலோ, ‘ஐயோ’ என்றாலோ தான் அது பீறிட்டு அழும். அழாதே என்று சமாதானம் செய்யும் வரை. விடு இந்த விவாதம் நமக்கெதுக்கு?

நியான் விளக்கில் உட்கார்ந்திருந்தேன். நேற்று தான் சித்தப்பா அழைத்தார். உன்னை விட சிறந்த ஒருவரை சந்திக்கவில்லை என்றேன். பிரதியை வைத்துக்கொண்டு, இது போன்ற ஒன்று வேண்டும் என்று அலைந்தால் நடக்காது. புதியதாய், எல்லா கோட்டையும் அழித்து ஒன்றிலிருந்து தொடங்க சொன்னார். இதுவும் நமக்கிப்போது தேவை இல்லை தான்.

சிறப்பாக இருந்தால் கட்டிக்க வேண்டுமா என்ன? “சின்னட்டுப் பசங்க” – இதால் ஆனது தான் சமூகம். அணுவோ, மூலக்கூறோ கொண்டு அமைக்கப்பட்டது என்று இயற்பியல் நம்மை ஏமாற்றத் தொடங்கி பல ஆண்டுகள் ஆகி விட்டன. நானும் இருபத்துமூன்று வருடங்கள் ஏமாறி இருக்கிறேன்.

அந்த நியான் விளக்கில் விட்டேன் அல்லவா? உன்னை தேட தொடங்கியது மனம். காமத்தேவைகளை கைபேசியிலேயே தீர்த்துக்கொள்ளும் அளவிற்கு உலகம் வளர்ந்துவிட்டது. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. எல்லாம் கைபேசியிலேயே செய்துவிடலாமாம். தேடியது அதற்க்கல்ல. உன்னை பார்க்க வேண்டும் போல இருந்தது. காலை நான்கு மணிக்கு பேச யாருமற்று, கணினி திரையை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். விடிந்தால் வீட்டுக்கு பொய் விடலாம்.

கீழே சக்கரங்களுடன், எளிதில் இழுத்துசெல்லக்கூடிய நாற்காலி. அது தான் அலுவலகமெங்கும் நிறைந்து இருக்கும். ஒரு சிலது பின்னால் சற்று நீளமாக இருப்பதால் நன்றாக சாய்ந்து கொள்ளலாம். அதிலும் கீழே ஒரு நெம்பி ஒன்று உண்டு. அதை நகர்த்திக்கொண்டால், செமி ஸ்லீப்பர் பேருந்தின் இருக்கை போல ஆகி விடும். இதையெல்லாம் இப்போது எதற்கு சொல்கிறேன். உன் நினைவு தான் முக்கியம்.

காலையில் என்னை எழுப்ப சொல்லி விட்டு தானே தூங்கினாய்? நேற்று உனக்கு வேலையும் இல்லை. நான் நேற்று காலையில் மறந்து விட்டேன். ஞாபகம் வந்த போது மணி ஆறேமுக்கால். அப்பொழுது உனக்கு அழைத்த போது, கட் செய்து, "ஐயோ! 6:50" என்றொரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு ஓடினாய். உன்னை மறந்தேனா என்றெனக்கு தெரியவில்லை. ஆனால், அந்த நாற்பத்தைந்து நிமிடங்கள் நான் உன்னை நினைக்கவே இல்லை. இதொரு வகையில் பார்த்தால் உன்னுடைய வெற்றி தான். என் மனதிலிருந்து உன்னை மாய்த்து, என்னுடன் இருப்பது தானே உன் லட்சியமே? இதெல்லாம் ஒரு லட்சியாமா?

அனால் பாரேன். ஒரு லட்சியத் தோழி. எத்தனை பேருக்கு வாய்க்கும்? இதையெல்லாம் தான் நினைத்துக்கொண்டிருந்தேன். எழுப்பி விடுவதும் கைபேசியால் எளிதாகிவிட்டது. ஆஃப் செய்ய முடியாத அலாரம் அடுத்தவர் ஒருவர் அழைப்பது தானே?

என்னவெல்லாம் சௌகரியங்கள்? தொழில்நுட்பம். வளர்கிறது. மானுடம். வளர்கிறது. உன்னை மாய்த்து என்னை வளர்க்கும் ஒரு அரிய கலையை லட்சியமாகக்கொண்டு... விடு. மனம் விடுதலை பெற மிக கடினம். சிறையை விட அதிக கொடுமையானது இந்த மனம். மன்னிப்பவர் கொடுக்கும் தண்டனை அதிகமானது. பிதற்றுகிறேன்.

அந்த நாற்காலி பற்றி சொன்னேன் தானே? அதை அப்படி போடுவதில் ஒரு சௌகரியம் உள்ளது. தூங்கலாம். ஆனால் மேலே குழல்விளக்கு. அதுவும், நீ இப்பொழுது ஒரு குழல்விளக்கை கற்பனை செய்து கொண்டாயே? அதை விட பிரகாசமானது.

ஆஸ்திரேலியாவில் மணி ஒன்பதரை. இப்பொழுது பகல் வெளிச்சத்தை சேமிக்காத தினங்கள். கோடை காலம் அங்கே. உலகில் கிறிஸ்துமஸ் கோடை காலத்தில் வரும் ஒரே நாடு அது தான். நல்ல நாடாம். அங்கே தான் என்னை மனச்சிறையில் அடைப்பார்கள். ஆன்சைட் என்று பெயருமிடுவார்கள். அங்கே மனிதர்கள் அலுவலகத்திற்கு பறக்கிறார்கள் இப்பொழுது. அங்கே அவர்களில் யாரேனும் வந்து விட்டால் இங்கு ஓய்வு தான்.

ஓய்வு தான் பல சிந்தனைகளுக்கும் காரணமாம். சும்மா இருப்பதென்றால் ரொம்ப கஷ்டம். மனம். எத்தனை நாட்கள் என்ன செய்கிறாய் என கேட்டதற்கு ‘சும்மா இருக்கிறேன்’ என்று பதிலளித்துள்ளேன்? அப்பொழுது எல்லாம் நான் சும்மா இருக்கவில்லை. உன் குறுஞ்செய்தி வராதா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். யோசனைக்கும் சும்மாவுக்கும் வெகு தொலைவு.

அந்த விளக்கை கற்பனை செய்து கொண்டாயா? அதை பார்த்துக்கொண்டே உறங்க முடியுமா? உன் நினைவு. அது இன்னொரு பக்கம். கண்ணில் கர்சீப் இடலாம். நினைவில்? உறக்கம் இன்பகரமான ஒரு செயல். ஆனால் வந்துத் தொலயணுமே? எந்த பக்கத்திலிருந்து அம்பு வருகிறது என்று யோசித்தால் முன்னூற்று அறுபது பாகை போதவில்லை. விடியும். ஆனால் இந்த நினைவைக்கொண்டு விடியும் வரை வாழ்ந்தால் ஒரு வேளை வீட்டிற்கு போகாமல், மரணிக்க முயற்சிப்பேனோ என்கிற பயம்.

என்னை மொத்த எதிர்மறை சிந்தனையின் உருவம் என்பார்கள். நான் அப்படியா பேசுகிறேன்? இதெல்லாம் நடப்பவை தானே? என்னை யாரும் புரிந்து கொள்வதில்லை. அலைகிறேன். "ஓடு. தொப்பை குறையும்", என்கிறார்கள். என் ஓட்ட வேகத்தை கண்டால், நீ ஒரு புன்னகை புரிவாய். உன் புன்னகையைக் காண நான் நின்று விடுவேன். அப்படி நிற்கையில், பின்னிருந்து ஒரு குரல், “ஓடுடா குண்டா” என்று கதறும். மனதளவில் பலவீனமாக தான் இருக்கிறேன். என் மனம் ஒல்லியாக தான் இருக்கிறது. உடல் தான், கொஞ்சம் உப்பி விட்டது. இன்னும் இருபத்தாறு கிலோ குறைத்தால் தான் நூறைத் தொட முடியும்.

உடல் பெரிதென்றால் பலவீனம். மனம் சிறிது என்றால் பலவீனம். எது பலவீனம் என்று யார் முடிவு செய்கிறார்கள்? எதை வைத்து முடிவு செய்கிறார்கள்?

நடக்க முடியவில்லை. உன் நினைவுகளால் தேங்குகிறது. நினைவுகள் தேங்க தேங்க மனம் மட்டும் ஏன் பருமனடையவில்லை? உனக்காவது தெரியுமா? ஒரு வழியாக உன் நினைவை அகற்ற ஒரு வழி கிடைத்தது. பாட்டுக் கேட்பது. அதிலும் பார், இந்த வாலி, “நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன்” என்று சொல்லி சும்மா இருப்பவனை கலக்கி விடுகிறார். பேய் படத்தின் பாட்டில் கூட “தனிமையில் ஒரு காதல் தாழ் போட்டு, இடைவேளியினில் என்னை நீ பூட்டு”. எல்லா பாட்டிலும் காதல். எத்தனை இன்ட்ரோ சாங் தான் கேட்பது? அதிலும் கற்பனை வறட்சி. ரௌத்திரம். வேறேதுமில்லை.

ஒருவர் திருப்பாவை பற்றி பேசத்துவங்கினார். அப்படியே அபிராமி அந்தாதி, வைரமுத்து, குறுந்தொகை என்றொரு சுற்று அடித்து விட்டு பார்த்தால், மணி ஐந்து. எழுந்து சென்று தேநீர் அருந்தி விட்டு வந்தால், வீட்டிற்கு செல்லும் நேரமாகிவிடும். ஆனால் மனம் கொள்ளவில்லை. கண்கள், “என்னை மூடு” என்று அழுதன. டேபிள் ஓடு சாய்ந்தேன். தொப்பை இடித்தது. மல்லாக்க படுத்து, கண்ணில் கர்சீப் போட்டுக்கொண்டேன்.

“ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
(இந்த வரியை முணுமுணுத்தேன். தெரியாது)
பூங்குவளை போதில் பொறி வண்டு கண் படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைப் பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்”

அடுத்தது...

“ஆழிமழைக் கண்ணா...”

உறங்கிப் போனேன். எல்லாம் மனம் தான். ஒரு கொலுசுச் சத்தம் என்னை எழுப்பியது. மணி ஆறு. ஒரு மணி நேரம் ஒன்பது நிமிடம் போல் இருந்தது. “விடிஞ்சுருச்சு” என்றாள். “ம்... இப்போ தான் தூங்கிட்டேன்” என்றேன். அவள் காலையிலே அரைத்தூக்கத்தில் எழுந்து வந்திருந்தாள். எத்தனை பேர்? ஆஸ்திரேலியாவில் பலர் வாழ தூக்கம் தொலைக்கிறோம். பணம் வருகிறது. சரிதான். அவளோடு பேசிக்கொண்டிருந்தேன். அவள் பக்கத்து டீம்.

“கார்த்திக் வந்தா போய்டலாம்...”
“அவர் வந்தா தான் போணுமா? தனிய சாப்டா ஒத்துக்காதா?” என்றாள்.
“போர் அடிக்கும்” என்றேன். கடந்த இரண்டு மணி நேரமாக எனக்கு போர் அடிக்கவே இல்லை. உன் நினைவுகளை மறப்பது ஒரு நல்ல விளையாட்டு. ஆனால் ஏனோ அப்படி சொன்னேன்.
அவள் சிரித்தாள். ஜீன்ஸ் போடும்போதும் கொலுசு போடுவாள். நவநாகரீகத்தின் பழமைவாதி. தூக்கம் கலைந்து விட்டது. மின்னஞ்சல் படித்துக்கொண்டிருந்தாள். நான் எழுந்து நின்று நெளிச்சு கொடுத்தேன். தசைகள் சிரித்தன. நன்றிகள் கூறின.

கார்த்திக் வந்தார். அவரோடு கீழே தேநீர் அருந்த சென்றேன். ஆறேமுக்கால் ஆகி விட்டது. கைபேசியை எடுத்துப்பார்த்தேன். “காட் அப்” என்ற குறுஞ்செய்தி வந்திருந்தது. இன்றும் இந்நேரம் உன்னை மறந்து விட்டேன். வெற்றி உனதே.

Monday, November 11, 2013

யாயும் ஞாயும்

"யாயும் யாயும் யாராகியரோஅனென்று நேர்ந்தததென்ன
யானும் நீயும் எவ்வழியரிடும் உறவு சேர்ந்த்தது என்ன
ஓரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கொடி பூத்ததென்ன
செம்புலம் சேர்ந்த்த நீர்த் துளி போல் அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன"

இந்த வரிகள் உள்ள பாடல் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலாக தான் இருக்க முடியும். 'நறுமுகையே நறுமுகையே' என்ற இந்த பாடலின் வரிகள் 'குறுந்தொகை' யிலுள்ள ஒரு பாட்டில் இருந்து தழுவி எழுதப்பட்டது. அந்த பாடல்:

"யாயும் ஞாயும் யாரா கியரோ 
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் 
யானும் நீயும் எவ்வழி யறிதும் 
செம்புலப் பெயனீர் போல 
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே"

இது குறிஞ்சி நில தலைவன் கூற்றாக வரும் பாடல்.
இதை எழுதியவர் பெயர் தெரியவில்லை. அதனாலேயே பாட்டில் வரும் 'செம்புலப் பெயனீரார்' என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இந்த பாட்டின் பொருள்,

"உன் தாயும் என் தாயும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்களா?
என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையில் உறவினர்கள்?
நீயும் நானும் எவ்வழி அறிமுகமானவர்கள்?
(எனினும்) பாலை நிலத்தில் பெய்த மழை போல 
நம்மிருவரது அன்புடைய நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன."


இதை கவிஞர் மீரா (வாசகப் பர்வம் படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும்) அருமையாக கிண்டலடித்து இன்றைய சமூஹத்தைப் பற்றி பாடுகிறார்.

"உனக்கும் எனக்கும்
ஒரே ஊர் - 
வாசுதேவ நல்லூர்...

நீயும் நானும்
ஒரே மதம்...
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்பும் கூட...

உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக் காரர்கள்-
மைத்துனன்மார்கள்

எனவே செம்புலப்பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.


இந்தப் பாட்டுக்கு மீரா இட்ட தலைப்பு நவயுகக் காதல். இதை சுஜாதா தன்னுடைய 'காதல் என்பது ...' கட்டுரையில் சொல்லி முடித்திருப்பார்.

Monday, November 12, 2012

வாசகனாவது சுலபம்

உறவுகள் கசந்துபோன ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சிதறுண்ட குடும்பத்தின் கதையே நம் காலத்தின் அடையாளம்.

இப்படி முன்னுரை எழுதி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, என்னை வாசிக்க வைக்கிறார் எஸ்.ரா. "புத்தனாவது சுலபம்"  எங்களுக்குள் - அதாவது எனக்கும் Siva வுக்கும் இடையே - ஒரு ஃப்ரேஸ்ஸாக இருந்தது. விவரிக்க முடியாத இடங்களில் ஒரு நிரப்பியாக பயன்படுத்திக் கொண்டிருந்தோம். சிரிப்பிற்கும். சோகத்திற்கும்.



இந்த புத்தகத்தின் முதல் கதை சிறப்பு. ஒரு பெண்ண போலீஸ், அவளுடைய வாழ்க்கை; ஒரு நாள் கதை. மேஜிக் போல சொல்கிறார் எஸ்.ரா. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னால் எழுதிட முடியாது என்று நினைத்த ஒரு வகையறா கதை அது. பெண்களின் கஷ்டம் பற்றியும், கூட்டங்களில் இருக்கையில், ஒரு நான்கு பேர் கூடி நிற்கும் இடத்தில் பீரியட் வரும்பொழுது ஏற்படும் மனோமாற்றங்களையும் அழகாய் எடுத்து சொல்லுகிறது இந்த கதை.

இரண்டாவது தான், "புத்தனாவது சுலபம்". படித்துவிட்டு Siva விற்கு கால் செய்தேன். என் மொபைலில் அறுபது பைசா பாலன்ஸ் இருந்தது. சிவாவை அழைத்து எனக்கு அழைக்கும் படி சொல்லி இந்த கதை பற்றி பேசிக்கொண்டிருந்தேன். மணி இரவு பன்னிரெண்டைத் தாண்டியிருந்தது. அந்த கதை என்னை அவ்வளவு பாதித்திருந்தது. அருமையான கதை. எந்தவொரு வீட்டிலும் இருக்கும் கதை. அதனாலேயே மிகவும் பிடித்திருந்தது. முக்கியமாக:
-->பைக் ஓட்டுனா தப்பா என்ற கேள்விக்கு இன்றைக்கும் என்னிடம் சரியான பதில் இல்லை
-->பையன்களுக்காகப் பொய் சொல்வதை அம்மாக்கள் விரும்புகிறார்கள். அது ஒரு சதி
-->இந்த உலகில் காதலைத் தவிர வேறு எதர்க்காவது பையன்கள் இப்படி உருகி உருகிக் கதறுவார்களா என்ன. அப்படி என்ன இருக்கிறது காதலில். (இவரது காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது)
இப்படியாக ஒரு தந்தைக்கும் பிள்ளைக்கும் இடையே உள்ள அந்த நெருக்கத்தையும், தூரத்தையும் அசாத்தியமான இயல்புடன், நடப்பதை அப்படியே ஸிம்பிளான தமிழில் கூறுகிறார் எஸ்.ரா.

மூன்றாவதாக இருந்த கதையை பற்றி சொல்லும் முன்... எஸ்.ரா கடல் பற்றி எழுதியிருப்பதை வாசித்தவரா நீங்கள்??? அப்படியானால், உங்களுக்கு அது பிடிக்குமா??? அவருடைய கடல் பற்றி எழுதும் நேர்த்தியை கண்டு வியப்படையாதவரா நீங்கள்??? இல்லையெனில், நீங்கள் இன்னும் அவர் எழுத்துக்களை நிறைய படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். "யாமம்" படித்த பிற்பாடு ஏனோ எஸ்.ரா எழுதும் கடலை படிக்கவே ஆசையாக உள்ளது, கடற்கரைக்கு போவதை விட. இந்த "பெண் என்று எவருமில்லை" என்ற சிறுகதை அப்படித்தான். கடலைப் பற்றிய எழுத்திர்க்காகவும், ராபி என்ற கதாப்பாத்திரமும் என்றும் என் மனதில் நிற்பவை. என் மனதில் என்றல்ல. யார் மனத்திலும்.

அடுத்ததாக, தமிழக இலக்கியத்துக்கு அதிகம் பழக்கப் படாத, ஐரோப்பிய வரலாறு சார்ந்த கதை. எனக்கிது மிகவும் பிடித்த கதைகளுள் ஒன்று. "தண்டனை முடிவு செய்தபிறகு அதை நிறைவேற்ற காரணம் தேடுவது தானே அதிகாரம்" - பட்டாசு. ப்ருனோ பற்றி விக்கிபீடியாவில் பார்த்ததே இந்த கதையைப் படித்த பின்னர் தான். இது ஒரு ஐ-ஓப்பனர். நல்ல விவாதம். மதம் எப்படி அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஒரு தடையாக இருந்தது என்பதர்க்கான ஒரு எடுத்துக்காட்டு. இந்த கதையில் வரும் அனைத்தும் வரலாறு ரீதியாக உண்மையே. இறுதியாக ப்ருனோ இவர் தான் என்றொரு பின்குறிப்பு போல எழுதியிருப்பது, சிரிக்க வைக்கிறது.

"ஜன்னலைத் தட்டாதே அஷ்ரப்" - என் ரேட்டிங்கில், இந்த புத்தகத்தில் நம்பர் டூ வில் இருப்பது. கதை சொல்லும் போது, கேட்கிறவனுக்கு கடுப்பு வரக்கூடாது. கேட்பவன் மனம் திறந்து, கதையை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அப்படிப் பட்ட ஒரு கதை. நீங்கள் நினைத்து பாருங்கள். உங்கள் வீட்டிற்கு உங்கள் சகோதரனின் தோழனோ யாரோ வருகிறார்கள். அவன் உங்கள் வீட்டை நன்றாக சுத்தம் செய்து, உங்கள் துணிகளைத் துவைத்து, எல்லாம் சுத்தம் செய்து, உங்களோடு பேசி கலையில் ஏதோ அன்றாட செலவுக்கு எதையோ திருடிச் செண்டு விடுகிறான். அப்படி இருந்தால், எப்படி இருக்கும்??? ஆடு போன்ற ஒருவன் தான் அஷ்ரப். அவனுக்கு வெட்கம், மானம் எல்லாம் கிடையாது. அவன் இப்படியே அலையும் ஒருவன். இந்த கதை மூலம், நாம் ஒவ்வொருவரும் இருக்க விரும்பும் ஒரு மனிதனை போல அஷ்ரஃபை சித்தரிக்கிறார். அருமையான கதை.

"ஜெயந்திக்கு ஞாயிற்றுகிழமை பிடிப்பதில்லை" - ஒரு சைவப் பெண் காதல் திருமணம் செய்து கொள்கிறாள். அவளுடைய கணவன் வீட்டில் ஞாயிற்றுகிழமை அசைவமின்றி அஸ்த்தமிப்பதில்லை. இந்த கதையின் வேடிக்கை என்னவென்றால், காதலிக்கும் போது பெரிதாய் தெரியாத பல விஷயங்கள், திருமணதிற்கு பின் மாறி விடுகிறது என்பது தான். எழுத்தாளரும் அதை தான் சொல்ல விரும்புகிறார். பெண் எவ்வளவோ த்யாகங்கள் செய்கிறாள் ஒரு திருமண வாழ்விற்காக என்பதையே சொல்லி இருக்கிறார். இது விகடன்-இல் வெளிவந்தபோது, பிரபு சொன்னார், "நல்ல கதை. இப்டி ஒரு கான்செப்ட்-அ எடுத்து எழுதியிருக்குராறு பாரேன்" என்று. சரி தான். அதில் அசைவம் என்பதை விட, காதலுக்கு முன், கல்யாணத்திற்குப் பின் என்ற அந்த சிந்தை - அருமை. சத்யப்ரபா அவர்கள் நான்-வெஜ் ஓ என்னமோ???

மற்ற சிறுகதைகள் எல்லாம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. "சொர்ணத்து ஆச்சிக்கு மன்மோகன்சிங்கைப் பிடிக்காது", என்ற கதை ஒரு ஹாஸ்ய நடையில் எழுதப்பட்டிருந்தது. சிரித்தேன்.

ஏனோ, "பொய்த்தொண்டை", "நடுவில் உள்ளவள்", "சொந்தக்குரல்", "சிற்றறிவு" - இந்த கதைகள் எல்லாம் நன்றாக இருப்பினும், வெகுவாக பிடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதில் எல்லாம் எதோ ஒரு சமூஹ சிந்தனை, குடும்ப பிரச்சனைகள் எனப் பல விஷயங்கள் இருக்கின்றன. நல்ல கதைகள் தான். நீங்கள் படித்து பாருங்கள், உங்களுக்கு பிடித்தாலும் பிடிக்கும்.

'சிறுமீன்' என்ற குறுங்கதை எனக்கு நிஜமாக புரியவில்லை. ஒரு பக்கம் தான் கதை. அதை தான் முதலில் படித்தேன். அப்பீலிங்காக இல்லை. நீதி சொல்கிற கதை போல...

"கொகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது" - ஆசிட் ஊற்றப்பட்ட முகம் கொண்ட ஒரு பெண்ணின் மனதிலிருந்து எழுதப்பட்டிருக்கும் இந்த கதை, நேர்த்தியாக இருந்தது. இயலாமையின் முழு வடிவமாக கொகிலவாணியைச் சித்தரித்திருக்கிறார். நல்ல எழுத்து, நல்ல நடை. ஆனால் பயத்தின் சின்னமாகவோ, கொடூரத்தின் உண்மையாகவோ இது நம் மனதில் பதிவதால் மறக்கவே நினைக்கிறோம் இக்கதையை.

இறுதியாக சீட்டாட்டம். இந்த கதையும் ஏனோ எனக்கு பிடிக்கவில்லை. அவர் எதையோ உவமையாக கூற விரும்புகிறாரா, இல்லை எனக்கு புரியும் மச்சூரிட்டி இன்னும் வரவில்லையா என்று எனக்கு புரியவில்லை.

இப்படியாக இந்த சிறுகதைத்தொகுப்பு அற்புதமான கதைகளைக்கொண்டது. சாஹித்ய அகாடமி விருது எஸ்.ரா விற்கு இதற்காக கொடுத்துவிடாதீர்கள். ஏற்கனவே பாவேந்தருக்கு நாடகத்திற்கும், கவியரசுக்கு புதினத்திற்கும், கவிப்பேரரசுக்கும் புதினத்திற்கு கொடுத்தது போதும். எஸ்.ரா. கதை சொல்கிறார் அற்புதமாக. ஆனால் அவரின் கட்டுரைத்தொகுப்பிர்க்கு இது ஒரு ஈடு அல்ல.

Wednesday, April 11, 2012

கெட்ட வார்த்தை



“எனக்கொரு சந்தேகம்”
“கேளேன்???”, புன்னகையுடன் அவள்.
“பொண்ணுங்க எல்லாம் கெட்ட வார்த்தை பெசுவாங்களா???”
“ம்…”, யோசிப்பது போல் பாவனை செய்தாள். “சிலர்…” என்று இழுத்தாள்.
“உனக்கு தெரிஞ்சு???”
“ஆங்ங்??.. நல்ல கேள்வி.. இதுக்கு பதில் சொல்வேன் னு நீ நெனக்குறியா?”
சிரித்தேன். ‘சொல்ல முடியாது‘ என்பதை எனக்கு வலிக்காமல்எவ்வளவு அழகாய் சொல்லி விட்டாள் இவள். என் தோழி. தேன்மொழி.
மாநிறம். சற்றே உயரம, ஒற்றை ஜடை, ஒக்கேஷனலி மல்லிச்ச்சரம் ஏறும் கூந்தல், பெரிய கண்கள்… பெண்ணுக்கு இலக்கணம் இல்லை, என்றாலும் பெண் என்ற பிரிவினையுள் அடங்கும் வண்ணம் அழகாய்…
“சரி அதிருக்கட்டும்… ஒன்னு கேக்கணும்…”
“கேளேன்??”, புன்னகைத்தாள். அவள் ‘கேளேன்’ என்பதில் ஒரு அழகு உண்டு. அந்த ‘க’கரத்தை சற்றே அழுத்தி, ‘ஏ’காரத்தை இழுத்து, ‘ன்’-ஐ ‘ங்’ ஆக்கி, ‘க்கேஏளேங்’ என்பது போல் ஒலிக்கும்.
“உனக்கு கெட்ட வார்த்தைகள் ஏதாவது தெரியுமா?”
சிரித்தாள். புன்னகைத்தாள்… வெட்க்கப்பட்டாள்…
“நான் லாம் பேச மாட்டேன் பா”, என்றாள். அந்த ‘பா’ – முன்னிலை ஒருமையாய் ஒரு புதிய ஆண்-பெண் நட்பில் வரும் ‘பா’ அல்ல. யாரோ, மூன்றாவது மனிதனிடம் சொல்வது போல் அமைந்த ‘பா’. என்னை குறி வைத்து ஒரு சண்டையின் போது மூன்றாவது மனிதனிடம் சொல்வது போல் சொன்னாள்…
“நீ பேசுவியா னா கேட்டேன்??? உனக்கு தெரியுமா?”
“அதெல்லாம் சொல்ல முடியாது…”
“என்கிட்டே சொல்றதுக்கென்ன???” இது என் ஆயுதம். அவள் சரெண்டர் ஆகி விடுவாள் இப்படி கேட்டால்.
“அட போடா நீ வேற!”
“ஸ்கூல்-ல யே  தெரிஞ்சுருக்குமே??? உண்மையா சொல்லு”
“பேசுவாங்க… எனக்கும் தெரியும்.. தி வீ….”, தயங்கினாள்.
“தி???”
“தி வீடியோ மேன்… இத வேகமா சொன்னா, ஒன்னு வரும் ல? அது ஸ்கூல் ல பிரபலம்”, அவள் படித்தது பெண்கள் மேல் நிலை பள்ளி என்பது குறிப்பிட தக்கது.
“ஓஹோ! எது?? அந்த வார்த்தையா???”
“இல்ல… இப்படி சொன்னா, அப்படி வரும்… அது கெட்ட வார்த்த அப்டிங்கறது”
நான் சிரித்தேன். அவள், அவள் கன்னத்தில் விழுந்த சில முடிகளை எடுத்து காதிற்கு பின்னால் சொருகிக் கொண்டாள். தேநீர் கோப்பையை எடுத்து, ஒரு முறை தேநீரை ‘ஸ்ர்ர்ர்ர்’ என்று இழுத்தால். ஏதோ யோசனையில் ஆழ்ந்தாள்.
“என்ன யோசிக்கிற?”, அவள் யோசிக்க ஆரம்பித்தால் ஏதோ விபரீதம் நடக்க இருக்கிறது என்று அர்த்தம. எந்த பெண் யோசித்தாலும் அப்படித்தான். அதனால், சிந்தனையை கலைத்தேன்.
“இல்ல… ஏன் அப்படி ஒரு தொழில்?”
“எப்படி?”
“தி வீடியோ…”, இழுத்தாள்.
“சுஜாதா-வோட ‘எப்படியும் வாழலாம்’ சிறுகதை படிச்சதில்ல???”
“”இல்லை… யேன்???”, அவள் ‘ஏன்’ என்று கேட்க மாட்டாள். ‘யேன்’ என்பாள்… கேட்கவே யேதோ போல் இருக்கும்.. சிலிர்ப்பாய்…
“உனக்கு கம்ப்யூட்டர் பத்தி தெரியுது. அவங்களுக்கு அது தான் தெரியுது. அப்படி ஒரு தொழில்”
“இது ஒரு ஜஸ்டிஃபிகேஷனா?”
“ஜஸ்டிஃபிகேஷன் இல்ல. ஆனா, அப்படி பார்க்க போனா, சரி தானே?”
“என்னமோ… எனக்கு தெர்ல”
மீண்டும் தேநீர் இழுத்தால். அவள் கண்கள் எதையோ கேட்க தயங்குவது போல் இருந்தது.
“என்ன? கேளு…”, நான் சொன்னேன்.
அவளுக்கு தெரியும், நான் கண்டுபிடித்து விடுவேன் என்று.
“அதில்ல… ஏன் ஆண்கள் அங்க போகணும்??? அப்படி என்ன அவுங்களுக்கு அப்படி ஒரு அடக்கிக் கொள்ள முடியாத ஒரு …”
வெற்றிடம்…
கேட்டுவிட்டாள்…
நான் தேநீர் கோப்பையை எடுத்து ஒரு இழு இழுத்தேன். ‘சரி காமெடியாவே அப்ரோச் பண்ணுவோம்…’, மனதில் நினைத்து கொண்டேன்.
“மனைவி திருப்திபடுத்தலைனா போவாங்க… இப்போ, உன் கல்யாணத்துக்கப்றம்…”, சிரித்து கொண்டிருந்த கண்கள், முறைத்தான.
“ம்… சொல்லு”, அதிகாரமாய் சொன்னாள்.
“..உன் கணவனும் போகலாம்… நீ…”
“எங்கே???” கேள்வியுடன், என் பேச்சை நிறுத்தி, முறைப்பின் காரத்தை கூட்டினாள்.
“ப்ராஸ்டிட்யூட் கிட்ட”
ஆங்கிலம் எவ்வளவு அழகிய ஒரு ஆயுதம்! எவ்வளவு கேவலமாம் வார்த்தையையும் அழகாய் சொல்லும் படி இருக்கின்றது?!?
“ஓஹோ! அப்ப பெண்கள் லாம் என்ன செய்றதாம்???”
“தெரியல…”
“அவுங்களுக்கெல்லாம் எதிர்பார்ப்பு இருக்காதா???”
“அதிகமான எதிர்பார்போட இருக்கிறது பெண்கள் தான்…”
“ஆமா.. எதிர்பார்ப்பு அதிகமா தான் இருக்கும். இந்த வசதி எல்லாம் இல்ல பாருங்க!”
பாருங்க-வில் வந்த ‘ங்க’ மரியாதை அல்ல. கான்வர்ேஸஷனில், பலபோதும் ஆண்களிடம் பொதுவாக ஏதேனும் சொல்ல விழைந்தால், இப்படி தான் சொல்வாள்.
சிறு மௌனம் நிலவியது.
அவளே அம்மௌனத்தை கலைத்தாள்.
“ஆமா… ப்ராஸ்டிட்யூட் கிட்ட போறாங்களே, அவுங்கெல்லாம் அப்டினா மேல் ப்ராஸ்டிட்யூட்ஸ் தானே?”
என் தேநீர் கோப்பையை எடுத்து தேநீரை இழுத்தேன். காலி ஆகி இருந்தது. காற்றை இழுத்தேன்.
அவள் கேள்வியின் உறைப்பு இப்பொழுது தான் மூளையில் மெதுவாக இறங்கியது.
“ஆமா… இல்ல.. தெரியல… இருக்கலாம்…”, உளறினேன். உரக்க சிரித்தாள். அந்த கடையில் இருந்த இருவர், திரும்பி என்னையே பார்த்தார்கள்…
பில் பே பண்ணிட்டு வெளிய வந்தோம்.
“நான் வேற யார்ட்டயும் இப்படி பேசுறதில்ல”, நான்…
“ஆமா, நாங்க தெனமும் ஒரு நூறு பேர்ட பேசறோம்… போ ல..”

“என்னமோ… யார்க்கு தெரியும்…”, நான் முன்னால் ஓட, அவள் துரத்திக் கொண்டு வந்தாள்.

Sunday, January 8, 2012

இப்படியும் ஒரு கதை...



"வாப்பா"

"வேணாம்ணே...", ஒரு மாதிரி சிரித்து கொண்டே சொன்னான்.

நான் மேஜை மேல் நிர்வாணமாக அமர்ந்திருந்தேன். எனக்குள்ளே ஏதோ வெப்பமாக உணர்ந்தேன்.

"வேணாம் தலைவா...", இன்னொருவனும் மறுத்தான்.

வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் வந்தவன் தலைவன். இருவர் தொண்டரென்று நினைக்கிறேன். எங்கள் அருகே வருவதற்கு பயந்து நின்றார்கள். சட்டென தலைவர் என் பக்கம் வந்து, என் உடலை வளைத்து பிடித்து, உதட்டருகே கொண்டு சென்று, மெதுவாக முத்தமிட்டார். ஒரு சில முத்தங்களுக்கு பிறகு, வியர்வை சிந்த தலைவர் காசு கொடுத்துவிட்டு நகர்ந்தார். அன்று தான் எனக்கு முதல் முறை. தேதியும் கூட நினைவில் உள்ளது. நவம்பர் 4. அப்போது நல்ல குளிர் காலம். எனக்கும் நல்ல டிமாண்ட். ஒரு நாளைக்கு எட்டு பத்து முறையாவது... என்னுடன் அந்த கூட்டத்தில் ஒரு முப்பது பேராவது இருந்திருப்பார்கள்.


ஒருமுறை ஒருவர் என்னை தீண்டி ரசித்தால் குளியல் எனக்கு மிக முக்கியம். எங்களுக்கான நீச்சல் குளம் ஒன்று அமைத்து கொடுத்திருந்தார் எங்கள் முதலாளி. அதில் அடிக்கடி தண்ணீர் மாற்றம் செய்வார்கள். சில நேரம் வெதுவெதுவென சுடுத்தண்ணியம் கிடைக்கும். அன்றெல்லாம் குஷிதான்.


என்னை நாடி பலதரபட்ட மக்கள் வருவதால் எனக்கு நெறைய விஷயங்கள் தெரியவும் வந்தது. ஐ.டி. (I.T) கம்பெனி முதல் அரசியல் வரை. சிவில் கான்ட்ராக்டில் இருந்து விளையாட்டு வரை.


விளையாட்டு என்றவுடன் தான் நினைவுக்கு வருகிறது. அன்றைய தினம் நான் மறக்கவே மாட்டேன். அன்று நவம்பர் 26.மேற்கு இந்திய தீவுகள் அணி இந்திய சுற்றுபயணம் மேற்கொண்டு இருந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள்... 'டிரா' வாக முடிய இருந்த ஆட்டத்தில் அஸ்வின் என்ற தமிழக பந்து வீச்சாளர் கலக்க இந்தியா பக்கம் வீசியது காற்று. அன்று ஒரு மூன்று மூன்றரை நேரம். மதியம். மதியம் ஒரு பையன் வந்தான். அவன் என்னை ரசித்தாநா என்றே என்றே சந்தேகம். எனக்குள் இருந்த வெப்பத்தை உணர்ந்தானா என்றே தெரியவில்லை. ஓரிரு முத்தங்களிட்டான். திடீரென்று அவன் தொலைபேசியில் எஸ்.எம்.எஸ். டோன் அடித்தது. "ச்ச... கோஹ்லி அவுட்... நாம தொதுடுவோம் போலயே!", என்று புலம்பி கொண்டே, என்னை விளக்கினான். ஓனரிடம் காசு கொடுத்துவிட்டு, "மேட்ச் பரபரப்பா போகுதுண்ணே. பொறவு வாரேன்" என்று கூறிவிட்டு சென்றான். அவனுக்கு ஒரு 21 வயதிருக்கும். எத்தனை வயதானாலும், அரைகுறையாய் முடிந்தாலும் குளித்ததாக வேண்டும். உள்ளிருந்த வெப்பத்தை அந்த நீராடல் தணிக்கும். ஃப்ரெஷ் ஆக்கிவிடும்.


அன்று இருவர் வந்தனர். என்னை ஒருவன் எடுத்துகொண்டான். ஒன்றுமே செய்யவில்லை. நாற்காலி மேல் என்னை நிர்வாணமாக அமர்த்தினான். சும்மா உட்கார்ந்திருக்கும் என்னை பார்க்க அவனுக்கு என்ன ஆசையோ! சில காகிதங்களில் கையெழுத்திட்டான். "உங்களுக்கு வேண்டுமா?" என்று இன்னொருவனிடம் கேட்டான். எனக்கு எரிச்சலாக இருந்தது. 'இவன் யாரடா இவன், என்னை வாங்கிக்கொண்டு அவனிடம் வேண்டுமா என்று கேட்கிறான்', என்று. நல்ல வேளையாக,"வேண்டாம். அடுத்த முறை பாத்துக்கலாம்", என்றான். "பேபெர்ஸ் லாம் கரெக்டா இருக்கா-னு ஒரு தடவ பாத்திடுங்க" என்றான் இவன். எனக்குன் இருந்த வெப்பம் தணிந்திருந்தது. என்னை எடுத்து அவன் ஒரு நீண்ட முத்தமிட்டான். அவன் உதடுகளை அவனே நாக்கால் தடவிக்கொண்டான். நான் குளியலுக்காக குளத்தில் தள்ளப்பட்டேன்.


இந்த குளியல் தான் எவ்வளவு சந்தோஷமான ஒரு வேலை? ஒரு சில நேரல்மேல்லாம் அடுத்த கஸ்டமர் எனக்காக வரும் வரை குளித்து கொன=தே இருப்பேன். சில நேரம் உலர்திக்கொள்ள வேண்டியிருக்கும். சில சமயங்களில், ஒரே ஒரு உதறல் தான். எல்லாம் சரியாகிவிடும். இரவில் எனக்கு கஸ்டமரே கிடையாது. எங்கள் பிசினெஸ் ஆரம்பமாகி, ஒரு நான்கு மாதங்கள் ஆகின்றன. இனி கோடை காலம். கஸ்டமர்கள் குறையும் காலம். வெயிலினால் நிறைய பேர் வர மாட்டார்கள். ஆனால், வெயிலின் உக்கிரத்தை குறைக்க குளியல் வேண்டும்.


இப்படியே போய் கொண்டிருந்த என் வாழ்வில், நேற்று அந்த சம்பவம் நிகழ்ந்தது. ஒரு ஆட்டோக்காரன் வந்தான். என் உடலை வளைத்து பிடித்து கொண்டான். என்னை அவன் உதடருகே கொண்டு சென்றான். முத்தமிட்டான். எனக்குள்ளிருந்த வெப்பம் அவன் மேலுதடை சுட்டது. சட்டென்று என்னை விடுவித்தான்.  நான் கீழே விழுந்தேன். என் மேல் பாகம் உடைந்து போனது. உள்ளிருந்த இஞ்சி-டீ சிந்தியது. என்னை கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரல் கும் இடையில் பிடித்து, ஓனர் ஒரு ஓரமாக வைத்தார். கீழே சிதறி கிடந்த கண்ணாடித் துண்டுகளை எடுத்து ஓரமாய் எறிந்தார். ஆட்டோக்காரன் "ஸாரி" என்று கூறிகொண்டே தலையை சொறிந்தான். ஓனர் அவனையே பார்த்துகொண்டிருந்தார். இனி குளியல் இல்லை!!!