Showing posts with label புத்தக அனுபவம். Show all posts
Showing posts with label புத்தக அனுபவம். Show all posts

Wednesday, January 22, 2014

அ. வெண்ணிலா எழுதிய "ஆதியில் சொற்கள் இருந்தன"

2014ஆம் ஆண்டில் வாசித்த முதல் புஸ்தகம், . வெண்ணிலா எழுதியஆதியில் சொற்கள் இருந்தன”. அன்பு நிலா பதிப்பகம் வெளியிட்ட கவிதைத்தொகுப்பு. விலை ரூபாய் 40/-.

68 கவிதைகள் கொண்ட தொகுப்பு. சோகம், சின்ன சின்ன கள்ளத்தனங்கள், இயற்கை, அன்றாட வாழ்வு என பல விதங்களில் எழுதப்பட்ட வரிகள். தோட்டம், மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றை அடிக்கடி பார்க்கலாம். நிறைய பெண்கள் பார்வை உலக அமைப்பைக் கற்றுக்கொள்ள முடிந்தது.
ஒரு கவிதை:

தேதி மாறாமல்
திட்டமிட்டதைப் போல்
மாதா மாதம்
நிகழ்கிறது
எனக்கான சுழற்சி என்றாலும்
நிகழும் முதல் கணம் 
விபத்தொன்றை
சந்தித்தார் போல்
அதிர்கிறது மனசு.

இதை படித்துவிட்டு யாரிடமாவது சொல்ல வேண்டும் போல் இருந்தது. நல்லவேளை நீங்கள் இருந்தீர்கள்.
இந்த கவிதை ஒரு பெண்ணுக்கானது. ஆனால், இதிலுள்ள அற்புதம், என்னை மிரள வைத்தது. என்ன தான் இருந்தாலும், கணக்கு படி பார்த்தாலும், தயாராக இருந்தாலும், காலையில் தூக்கத்தில் கையை கிழித்துக்கொண்டு ரத்தம் கொட்டினால் எப்படி இருக்குமோ, அப்படி தானே இருக்கும் ஒரு பெண்ணுக்கு

பெண்களின் பார்வை எல்லாவற்றிலும் எவ்வளவு மாறுபட்டு நிற்கிறது. முக்கியமாக காமம் சார்ந்து பெண்கள் எழுதுவது வியக்கும் படியாக இருக்கிறது. உறுப்பின் பெயர்களைக் கொண்டு, வடிவமைப்புக்காக திணிக்கப்படும் அங்கங்களின் பெயர்கள் அல்லாமல், இவர்களால் சரளமாக காமத்தை சொல்லி போக முடிவது ஒரு அதிசயம். குட்டி ரேவதியின்ஜன்னல்கள் இருக்கும் வீடுக்யுவில் இருக்கிறது.

இந்த கவிதை என்னை மேஸ்மரைஸ் செய்தது.

களைத்துச் சலித்து
உள் நுழைகிறேன்.
ஆடை மாற்றுகையில்
கழன்று விழுகின்றன
உடல் முழுவதும் பதிந்திருந்த
பார்வைகள்
தீண்டல்கள்
தொடுதல்கள்
உரசல்கள்
உதறி எடுத்து 
வேற்றாடை மாற்றித்
திரும்புகையில்
அத்தனையையும்
இரவு தன்
கைகளில்
சேகரித்துக் கொண்டிருந்தது.

இது ஒரு பெண்ணால் மட்டுமே எழுதியிருக்க முடியும் என்று நம்புகிறேன்.

 ரசனை. அது தானே எல்லாம். மழை, சூரியன், நிலா என்கிற எப்போழுதுமிருக்கும் கவிதையை தாண்டி, முத்தம், வலி போன்றவற்றின் அழகையும் கூறியது சுகம். கவிதை எப்படி இருக்கிறதென்றெல்லாம் சொல்லாமல் நான் ஒரு கேள்வி கேட்க விழைகிறேன். அந்த மதியத்தை உண்டு கொண்டிருக்கும் அணில் உங்கள் தோட்டத்தில் தான் இன்னும் உள்ளதா?

கனவு பற்றி எழுதியதில்,

அன்றாடங்களைத்
தொலைக்கும்
அரிய பொழுதொன்றில்
வாய்க்குமோ என்னவோ!

-இது என்னைக் கவர்ந்தது.
கனவை, அன்றாடங்களைத் தொலைக்கும் இடத்தில் தேட சொல்வது, ரசிக்கும் படி இருந்தது. முரண்களை சொல்வதிலும் சில இடங்களில் கலக்கியிருக்கிறார்.

1.
துண்டொன்றைக்
கட்டிக் கொண்டு
அம்மாவாக முடிகிறது
குழந்தைகளால்

குழந்தையாக முடியாமல்
அல்லற்பட்டுக் கொண்டிருப்பது
அம்மாக்கள் தான்.

2.
குழந்தை
உறங்கி விட்டதை
உறுதிபடுத்திக் கொண்டு
நின்று போகும் தொட்டில்.

ஆடிக் கொண்டிருக்கிறதா
தொட்டில் என
உறுதி செய்து கொள்வதே இல்லை
குழந்தையின் உறக்கம்.

மேலும் பல கவிதைகள் நல்ல எதிர்ப்பதங்கள் தந்து நின்றது நன்றாக இருந்தது. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் பற்றிய கவிதை கிளாஸ். கண்ணாடியில் தன்னையே கண்டு விட்டதும். புதியதாய் கவிதை படிப்பவன் தான் நான். மிகவும் பிடித்திருந்தது. ரசித்தேன்.

கவிதையில் நல்லது கெட்டது என்றெல்லாம் கிடையாது. எல்லாம் நல்ல கவிதைகள் தான். அந்த அனுபவம் உங்களுக்கு வரும் வரை, எல்லா கவிதைகளும் கொஞ்சம் மனதில் நிற்காது தான். ‘சாம்ராஜ்’-இன் ‘காணாமல் போனவர்கள்’ பற்றிய கவிதையாக இருக்கட்டும், விநாயக முருகனின் ‘கண்ணீர் அஞ்சலி போஸ்டர்’ பற்றிய கவிதையாக இருக்கட்டும், அந்த நிலைமையை பார்க்காத வரை அது வார்த்தைகள் தான். பார்க்கும்போது தான் அது அனுபவம் ஆகிறது.


கவிதைகள் வாழ்வின் பெரிய கதையல்லாத விஷயங்களை சொல்வது தான். இதில் பெரிய விஷயங்கள் மிக சுலபமாக சொல்லப்படுகின்றன. ‘ஆதியில் சொற்கள் இருந்தன’ ஒரு நல்ல தொகுப்பு. நல்ல மாலைப் பொழுதை நீங்கள் இந்த புத்தகத்திற்காக கண்டிப்பாக கொடுக்கலாம்.

Monday, November 12, 2012

வாசகனாவது சுலபம்

உறவுகள் கசந்துபோன ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சிதறுண்ட குடும்பத்தின் கதையே நம் காலத்தின் அடையாளம்.

இப்படி முன்னுரை எழுதி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, என்னை வாசிக்க வைக்கிறார் எஸ்.ரா. "புத்தனாவது சுலபம்"  எங்களுக்குள் - அதாவது எனக்கும் Siva வுக்கும் இடையே - ஒரு ஃப்ரேஸ்ஸாக இருந்தது. விவரிக்க முடியாத இடங்களில் ஒரு நிரப்பியாக பயன்படுத்திக் கொண்டிருந்தோம். சிரிப்பிற்கும். சோகத்திற்கும்.



இந்த புத்தகத்தின் முதல் கதை சிறப்பு. ஒரு பெண்ண போலீஸ், அவளுடைய வாழ்க்கை; ஒரு நாள் கதை. மேஜிக் போல சொல்கிறார் எஸ்.ரா. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னால் எழுதிட முடியாது என்று நினைத்த ஒரு வகையறா கதை அது. பெண்களின் கஷ்டம் பற்றியும், கூட்டங்களில் இருக்கையில், ஒரு நான்கு பேர் கூடி நிற்கும் இடத்தில் பீரியட் வரும்பொழுது ஏற்படும் மனோமாற்றங்களையும் அழகாய் எடுத்து சொல்லுகிறது இந்த கதை.

இரண்டாவது தான், "புத்தனாவது சுலபம்". படித்துவிட்டு Siva விற்கு கால் செய்தேன். என் மொபைலில் அறுபது பைசா பாலன்ஸ் இருந்தது. சிவாவை அழைத்து எனக்கு அழைக்கும் படி சொல்லி இந்த கதை பற்றி பேசிக்கொண்டிருந்தேன். மணி இரவு பன்னிரெண்டைத் தாண்டியிருந்தது. அந்த கதை என்னை அவ்வளவு பாதித்திருந்தது. அருமையான கதை. எந்தவொரு வீட்டிலும் இருக்கும் கதை. அதனாலேயே மிகவும் பிடித்திருந்தது. முக்கியமாக:
-->பைக் ஓட்டுனா தப்பா என்ற கேள்விக்கு இன்றைக்கும் என்னிடம் சரியான பதில் இல்லை
-->பையன்களுக்காகப் பொய் சொல்வதை அம்மாக்கள் விரும்புகிறார்கள். அது ஒரு சதி
-->இந்த உலகில் காதலைத் தவிர வேறு எதர்க்காவது பையன்கள் இப்படி உருகி உருகிக் கதறுவார்களா என்ன. அப்படி என்ன இருக்கிறது காதலில். (இவரது காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது)
இப்படியாக ஒரு தந்தைக்கும் பிள்ளைக்கும் இடையே உள்ள அந்த நெருக்கத்தையும், தூரத்தையும் அசாத்தியமான இயல்புடன், நடப்பதை அப்படியே ஸிம்பிளான தமிழில் கூறுகிறார் எஸ்.ரா.

மூன்றாவதாக இருந்த கதையை பற்றி சொல்லும் முன்... எஸ்.ரா கடல் பற்றி எழுதியிருப்பதை வாசித்தவரா நீங்கள்??? அப்படியானால், உங்களுக்கு அது பிடிக்குமா??? அவருடைய கடல் பற்றி எழுதும் நேர்த்தியை கண்டு வியப்படையாதவரா நீங்கள்??? இல்லையெனில், நீங்கள் இன்னும் அவர் எழுத்துக்களை நிறைய படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். "யாமம்" படித்த பிற்பாடு ஏனோ எஸ்.ரா எழுதும் கடலை படிக்கவே ஆசையாக உள்ளது, கடற்கரைக்கு போவதை விட. இந்த "பெண் என்று எவருமில்லை" என்ற சிறுகதை அப்படித்தான். கடலைப் பற்றிய எழுத்திர்க்காகவும், ராபி என்ற கதாப்பாத்திரமும் என்றும் என் மனதில் நிற்பவை. என் மனதில் என்றல்ல. யார் மனத்திலும்.

அடுத்ததாக, தமிழக இலக்கியத்துக்கு அதிகம் பழக்கப் படாத, ஐரோப்பிய வரலாறு சார்ந்த கதை. எனக்கிது மிகவும் பிடித்த கதைகளுள் ஒன்று. "தண்டனை முடிவு செய்தபிறகு அதை நிறைவேற்ற காரணம் தேடுவது தானே அதிகாரம்" - பட்டாசு. ப்ருனோ பற்றி விக்கிபீடியாவில் பார்த்ததே இந்த கதையைப் படித்த பின்னர் தான். இது ஒரு ஐ-ஓப்பனர். நல்ல விவாதம். மதம் எப்படி அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஒரு தடையாக இருந்தது என்பதர்க்கான ஒரு எடுத்துக்காட்டு. இந்த கதையில் வரும் அனைத்தும் வரலாறு ரீதியாக உண்மையே. இறுதியாக ப்ருனோ இவர் தான் என்றொரு பின்குறிப்பு போல எழுதியிருப்பது, சிரிக்க வைக்கிறது.

"ஜன்னலைத் தட்டாதே அஷ்ரப்" - என் ரேட்டிங்கில், இந்த புத்தகத்தில் நம்பர் டூ வில் இருப்பது. கதை சொல்லும் போது, கேட்கிறவனுக்கு கடுப்பு வரக்கூடாது. கேட்பவன் மனம் திறந்து, கதையை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அப்படிப் பட்ட ஒரு கதை. நீங்கள் நினைத்து பாருங்கள். உங்கள் வீட்டிற்கு உங்கள் சகோதரனின் தோழனோ யாரோ வருகிறார்கள். அவன் உங்கள் வீட்டை நன்றாக சுத்தம் செய்து, உங்கள் துணிகளைத் துவைத்து, எல்லாம் சுத்தம் செய்து, உங்களோடு பேசி கலையில் ஏதோ அன்றாட செலவுக்கு எதையோ திருடிச் செண்டு விடுகிறான். அப்படி இருந்தால், எப்படி இருக்கும்??? ஆடு போன்ற ஒருவன் தான் அஷ்ரப். அவனுக்கு வெட்கம், மானம் எல்லாம் கிடையாது. அவன் இப்படியே அலையும் ஒருவன். இந்த கதை மூலம், நாம் ஒவ்வொருவரும் இருக்க விரும்பும் ஒரு மனிதனை போல அஷ்ரஃபை சித்தரிக்கிறார். அருமையான கதை.

"ஜெயந்திக்கு ஞாயிற்றுகிழமை பிடிப்பதில்லை" - ஒரு சைவப் பெண் காதல் திருமணம் செய்து கொள்கிறாள். அவளுடைய கணவன் வீட்டில் ஞாயிற்றுகிழமை அசைவமின்றி அஸ்த்தமிப்பதில்லை. இந்த கதையின் வேடிக்கை என்னவென்றால், காதலிக்கும் போது பெரிதாய் தெரியாத பல விஷயங்கள், திருமணதிற்கு பின் மாறி விடுகிறது என்பது தான். எழுத்தாளரும் அதை தான் சொல்ல விரும்புகிறார். பெண் எவ்வளவோ த்யாகங்கள் செய்கிறாள் ஒரு திருமண வாழ்விற்காக என்பதையே சொல்லி இருக்கிறார். இது விகடன்-இல் வெளிவந்தபோது, பிரபு சொன்னார், "நல்ல கதை. இப்டி ஒரு கான்செப்ட்-அ எடுத்து எழுதியிருக்குராறு பாரேன்" என்று. சரி தான். அதில் அசைவம் என்பதை விட, காதலுக்கு முன், கல்யாணத்திற்குப் பின் என்ற அந்த சிந்தை - அருமை. சத்யப்ரபா அவர்கள் நான்-வெஜ் ஓ என்னமோ???

மற்ற சிறுகதைகள் எல்லாம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. "சொர்ணத்து ஆச்சிக்கு மன்மோகன்சிங்கைப் பிடிக்காது", என்ற கதை ஒரு ஹாஸ்ய நடையில் எழுதப்பட்டிருந்தது. சிரித்தேன்.

ஏனோ, "பொய்த்தொண்டை", "நடுவில் உள்ளவள்", "சொந்தக்குரல்", "சிற்றறிவு" - இந்த கதைகள் எல்லாம் நன்றாக இருப்பினும், வெகுவாக பிடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதில் எல்லாம் எதோ ஒரு சமூஹ சிந்தனை, குடும்ப பிரச்சனைகள் எனப் பல விஷயங்கள் இருக்கின்றன. நல்ல கதைகள் தான். நீங்கள் படித்து பாருங்கள், உங்களுக்கு பிடித்தாலும் பிடிக்கும்.

'சிறுமீன்' என்ற குறுங்கதை எனக்கு நிஜமாக புரியவில்லை. ஒரு பக்கம் தான் கதை. அதை தான் முதலில் படித்தேன். அப்பீலிங்காக இல்லை. நீதி சொல்கிற கதை போல...

"கொகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது" - ஆசிட் ஊற்றப்பட்ட முகம் கொண்ட ஒரு பெண்ணின் மனதிலிருந்து எழுதப்பட்டிருக்கும் இந்த கதை, நேர்த்தியாக இருந்தது. இயலாமையின் முழு வடிவமாக கொகிலவாணியைச் சித்தரித்திருக்கிறார். நல்ல எழுத்து, நல்ல நடை. ஆனால் பயத்தின் சின்னமாகவோ, கொடூரத்தின் உண்மையாகவோ இது நம் மனதில் பதிவதால் மறக்கவே நினைக்கிறோம் இக்கதையை.

இறுதியாக சீட்டாட்டம். இந்த கதையும் ஏனோ எனக்கு பிடிக்கவில்லை. அவர் எதையோ உவமையாக கூற விரும்புகிறாரா, இல்லை எனக்கு புரியும் மச்சூரிட்டி இன்னும் வரவில்லையா என்று எனக்கு புரியவில்லை.

இப்படியாக இந்த சிறுகதைத்தொகுப்பு அற்புதமான கதைகளைக்கொண்டது. சாஹித்ய அகாடமி விருது எஸ்.ரா விற்கு இதற்காக கொடுத்துவிடாதீர்கள். ஏற்கனவே பாவேந்தருக்கு நாடகத்திற்கும், கவியரசுக்கு புதினத்திற்கும், கவிப்பேரரசுக்கும் புதினத்திற்கு கொடுத்தது போதும். எஸ்.ரா. கதை சொல்கிறார் அற்புதமாக. ஆனால் அவரின் கட்டுரைத்தொகுப்பிர்க்கு இது ஒரு ஈடு அல்ல.