Tuesday, December 11, 2012

என் அம்மிணி



எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. பாட்டி இறந்து போன நாள். நான் பிறந்த பிறகு என் குடும்பத்தில் போகும் முதல் உயிர். பாட்டி. இருபது நாட்கள் ஆசுபத்திரியில் இருந்தாள். பதினைந்து நாட்கள் வென்டில்லேட்டரில் வைத்திருந்தார்கள். ஒரு முறை பார்க்க அழைத்து சென்றார்கள் என்னை. தொண்டையில் துளையிட்டு, அதன் மூலம் ஜூஸ் போன்றவற்றை உணவாக கொடுத்தார்கள். எனக்கு வயது பதினான்கு. பதினான்கு வருடங்களாக மரணத்தை பார்க்காத ஒரு குடும்பம் மரணத்தை காணும்போது பல ஆண்டுகளாக காணாத சில கண்ணீர் துளிகள், காணக்கிடைக்கிறது.

அது ஒரு வோர்கிங்டே. எனக்கு ஸ்கூல் இருந்தது. நான் சுவர் ஓரமாக படுத்திருந்தேன். காலை ஐந்து மணிக்கு அம்மா தட்டி எழுப்பினார். “மோன்ட அச்சம்மா மரிச்சு”, என்று சொன்னார்கள். எனக்கு தூக்கம் தேவையாக இருந்திருக்க வேண்டும். “அச்சம்மே!!!””, என்று அழைத்து குப்புற படுத்து இன்னும் இரண்டரை மணி நேரம் உறங்கினேன். அன்று, “ஏன் அதிகம் உறங்கினாய்?” என்று யாரும் கேட்கவில்லை. எழுந்து பார்த்தபோது பந்தலிட்டுக்கொண்டிருந்தார்கள்.

பந்தல் இடுவதற்கு குழி பறிக்க வேண்டும். அதில் கால்களை நட்டு ஆட்கள் உயரத்திற்கு, வேயப்பட்ட ஓலையால் பந்தல் கூரை கட்டுவார்கள். பின் அதில் கயிறு கட்டி அவர்கள் கட்டிய கூரையை மேலே தூக்கி ஒரு நல்ல உயரத்திற்க்கு உயர்த்தி கயிறால் கட்டி விடுவார்கள். ஷாமியானா போடும் இந்த காலத்தில், எங்கள் வீட்டு வாசலில் நின்ற கூரை புன்சிரிப்பை வரவழைத்தது.

அன்று கார்த்திகை தீபம். அதனால் பாட்டி புண்ணியம் செய்தவளாகவே கருதப்பட்டாள். நிறைய பேர் அதற்குள் செய்தி தெரிந்து வந்திருந்தார்கள். அப்பா, சித்தப்பாக்களுடைய நண்பர்கள், அயல் வீட்டார், சொந்தங்கள். சிலர் வந்துக்கொண்டிருந்தார்கள். அப்பா மலையாளத்தில் பேசிக்கொண்டிருந்தார்: “எல்லாரும் சொல்வாங்க, ‘அம்மிணியே! கோபி நெத்தியிலே வச்ச போட்டு மாய மாட்டேங்குது. நீ சுமங்கலியா தான் போவ’ – னு. அது உண்மையா தான் ஆய்டுச்சு”

பெண் தனியாக வாழ்வது கடினம் என்பதற்கு அவள் சுமந்கலியாய் இறந்திட வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன வேடிக்கை!!! ஒரு பெண் அவள் கணவன் இறந்தபின் வாழ்ந்தால் அவள் சபிக்கப்பட்டவளா??? மரணம் என்பது என்றானாலும் இந்த மலம் நிறைந்த உடலிலிருந்து அழுக்கற்ற ஆன்மாவுக்கு விடுதலை தானே? அப்பாவைச் சுற்றி ஐந்தாறு பேர் அமர்ந்து, கண்ணீர் வற்றிய கன்னங்கள் வழியே ‘உம்’ கொட்டிய படியும் , ‘ஆம்’ பாணியில் தலையாட்டிய படியும் இருந்தார்கள்.
அப்பா தொடர்ந்தார், “பெண்கள் பல்லைக் கடிச்சுக்குட்டு வாழ்ந்துடுவாங்க. ஆனா, ஆண்கள் அப்படி இல்ல. பெண்ணு போயிட்டா, சகிச்சுக்க மாட்டாங்க”, இரண்டு முரண்பாடான வாக்கியங்கள். சோகம் நிறைந்த மனம் போதை ஏறியது போல தான். பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருக்கும்.

போர்ட்டிகோவில் பாட்டி படுத்திருந்த கட்டில் போடப்பட்டிருந்தது. நான் அன்று ஸ்கூலுக்கு போகவில்லை. ஃபோன் செய்து நண்பனிடம் லீவ் சொல்லிவிடுமாறு சொன்னேன். பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் குழந்தைகளுக்கும், அழாதவர்களுக்கும் இட்லி சுட்டுக் கொண்டுவந்தார்கள். சட்னியில் உப்பு கம்மியாக இருந்தது. அதை சொல்ல முடியாத நிலைமை, அதனால் சொல்லவில்லை.

நவம்பர் மாதம் என்பதால் கொஞ்சம் குளிராக இருக்கும். மொட்டை மாடி என்பது என் வயதுடைய அனைவருக்கும் பிடித்த ஒன்றாகவே இருக்கிறது. தனியாக மொட்டை மாடியில் அமர்ந்திருக்கும் நேரம் நம் வாழ்வில் எல்லா நாட்களைப் பற்றியும், வினாடிக்கு ஒரு நாள் என்று வைத்து நினைத்துப் பார்க்க முடிகிறது. பாட்டியை நினைத்து ஒரு கண் மட்டும் கண்ணீர் விட்டது. பாட்டிக்கு நான் உயிராக இருந்தேன். எனக்கு, ஒரு டைப் ஆஃப் பீப்பிளில் நான் தான் கடைசி மனிதன் என்ற நினைப்பு உண்டு. நான் பாட்டி கதைகள் கேட்டு வளர்ந்த கடைசி சிலரில் ஒருவன்.

மகாபாரதம், ராமாயணம் என்று அனைத்திலும் ரொமான்ஸ் தவிர்த்து ஒரு ‘யு’ செர்ட்டிஃபிகேட் கதை ஒன்றை என் பாட்டி வைத்திருப்பாள். என்ன அம்மாவை பலர்பாலில் மரியாதையாய் அழைத்து, பாட்டியை ஒருமையில் அழைக்கிறேன் என்று யோசிக்கிறீர்களா? அவள் என் ஃப்ரெண்டு. என்னோடு குளிப்பாள், குளிப்பாட்டுவாள், என்னோடு தான் சாப்பிடுவாள். பாட்டிக்கு ‘லோ பீ.பி.’ வந்த பிறகு நானும் அவளோடு உப்பில்லாத சப்பாத்தி சாப்பிடுவேன். அவளோடு தான் உறக்கமும். உறக்கத்தின் போது தான் கதை.

கம்சன் மோசமானவன், இராவணன் கெட்டவன், மஹாபலி அசுரர் குலத்தில் பிறந்த நல்லவன், கிருஷ்ணன் அவதாரங்கள் – இப்படி பல கதைகள் சொல்வாள். ஒன்றாக ‘ஓம்.நம சிவாய’ , ‘ஜெய் ஹனுமான்’ எல்லாம் பார்ப்போம். எனக்கு கணக்கு சொல்லித் தருவாள்.

பாட்டி எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. ஆங்கில பாடத்தில் தோல்வியுற்றாள். கணக்கில் நூறாம். பாட்டி என்னிடம் பொய் சொல்ல மாட்டாள். வீட்டில் பால் கணக்கு பாட்டி தான் பார்ப்பாள். பத்து பேருக்கு பால் வாங்குவதற்கு கணக்கு பார்ப்பது பெரிய விஷயம் தான். இறுதி வரை ஒரு ரூபாய் தவறாகப் போனதில்லை.

என் பாட்டிக்கு வந்த மிகப்பெரிய சோகமும், கோபமும் அவளுடைய மூன்றாவது மகன் காதல் திருமணம் செய்து கொண்டது தான். அந்த பெண் பார்க்க கே.ஆர்.விஜயா போல் இருப்பதாக, என் சித்தப்பா (அந்த மூன்றாவது மகன்) சொல்வார் என்று சில பெரியவர்கள் கூறுவதை கேட்டிருக்கிறேன். இப்போது, கீழே ஹாலில் கே.ஆர்.விஜயா முகத்தில் ரத்தம் வெற்றிப் போய் அழுதுகொண்டிருந்தாள்.

எங்கள் மரணங்களில் தாரத்தப்பட்டைகள் இருப்பதில்லை. சங்கு, மணி – எதுவும் இல்லை. அழுகையே அவர்களே அழுவது தான். கே.ஆர்.விஜயா ஏன் அழுகிறாள் என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது. அவள் என்று, என் பாட்டி மகனை இழுத்துக்கொண்டு ஓடினாளோ (அப்படி தான் நினைக்கிறார்கள். பழி என்றும் பெண்ணுக்கு தானே) அன்றோடு என் வீட்டிலிருந்து ஒதுக்கி விட்டார்கள். அவளுக்கு அம்மிணி எதுவும் செய்யவில்லை. ஒரு சேலை கூட எடுத்துக்கொடுத்தது கிடையாது. பின் ஏன் மரணத்திற்கு அழுகிறாள்? எனக்குத் தெரியவில்லை. அவளை குடும்பத்தில் சேர்த்துக்கொள்ளாததற்கு இன்று அழுது தீர்க்கிறாளோ? தெரியவில்லை.

அழுகை – சிரிப்பு போல் ஒரு தோற்று வியாதி அல்ல. சிரிக்க வைக்க எத்தனையோ கலைஞர்கள் வந்துவிட்ட இந்த காலகட்டத்திலும், அழவைக்க யாரும் இல்லை. எப்படித்தான் அழுகை வருகிறதோ தெரியவில்லை. அழும் பெண்களைப் பார்க்க பாவமாய் இருந்தது. தண்ணீர் தர வேண்டும் போல் இருந்தது. பாட்டி இருந்திருந்தாலும் அவள் சமாதானம் தான் செய்திருப்பாள்; தண்ணீர் கொடுத்திருப்பாள்.

என் பாட்டிக்கு ஐந்து குழந்தைகள். எனக்கு ஒரு அத்தை. மற்ற நால்வரும் ஆண்கள். என் அப்பா தான் பெரியவர். அத்தை அப்போது திருமணம் முடிந்து, வடக்கே எங்கோ ஒரு ஊரில் இருந்தார். அன்று, அத்தை மதியம் தான் வந்தாள். அவள் நேராய் ஐஸ் பெட்டி அருகே சென்று அமர்ந்தாள். “என்ன நோக்கு அம்மே! என்ன நோக்கு அம்மே!” என்று மெல்ல அழத்தொடங்கினாள். என் அத்தை எனக்கு செல்லம். எனக்கு அவள் அழுவது பிடிக்கவில்லை. “அழாதீங்க’, என்றேன் அருகில் சென்று. என் அம்மா என்னை பின்னுக்கு இழுத்து, “கரையட்டே! வெஷமம் மாறான் கரையணம்”, என்றார். துடைப்பதால் கண்ணீர் நின்றுவிடுமா??? அழுதாள் கவலைகள் தான் தீருமா??? என் அம்மாவுக்கு தெரியவில்லை. பாவம்.

என் பாட்டிக்கு என் அப்பா தான் பெரிய பையன். அப்பாவோடு நான்கு பேர் தான் ஆண்கள் உடன்பிறந்தோர். இடுகாட்டிற்கு செல்ல ஒற்றைப்படையில் ஆண்கள் வேண்டும் என்பதற்காக என்னையும் குளித்து, ஈறன் உடுத்தி ஸ்மசானதிற்குக் கூட்டிச் சென்றார்கள். என் அப்பா தான் கொள்ளி வைத்தார்.
     “திரும்பி பார்க்காம போங்க” – வெட்டியான் குரல்.
    
காவிரி கரையோரமாக இருந்த ஓயாமரி சுடுகாடு ஒரு நிமிட நிசப்தத்திற்கு பிறகு, குயிலைக் கூவச் சொன்னது. கோட்டான் ஒன்று அலறியது. இருட்டத் தொடங்கியிருந்தது - நாளும், ஒரு சிலரது வாழ்வும்.

வீட்டிற்கு வந்து குளித்து மாடிக்குச் சென்றேன். அத்தை கண்ணீர வடித்துக் கொண்டிருந்தாள்.
     “எந்தா?”
     “அச்சம்மா... அச்சம்ம போயி...”, மறுபடி அழத்துவங்கினாள்.
     “கரையண்டா...”, தேற்றினேன்.
     “ரொம்ப கஷ்டப்பட்டாங்க. இல்லே???”
     “ஏதோ எறும்ப கொன்னுருப்பா போல. அதுக்கு தான் இதெல்லாம். சொர்கத்துக்கு தான் போவா... அழாதீங்க...”
அத்தை கே.ஆர்.விஜயா போல் அல்லாமல், அமைதியாக அழுதாள். அவளை சற்று நேரம் அழவிட்டேன். அவளே அமைதியானாள்.

அன்று இரவு அந்த ஃபால்ஸ் ரூஃபிங் இல்லாத கூரையின் கீழே தான் அமர்ந்திருந்தோம். கொசுவை விரட்ட, சிமெண்ட் கலவைக் கலக்கும் சட்டியில் கணல் இட்டு (சாம்பிராணிக்கு பூஜை அறையில் வைத்திருந்தது) நெருப்பு பற்ற வைத்து, அதன் மேல் வாசலில் நின்ற வேம்பின் இலைகளை பறித்து இட்டோம். பாட்டியின் சொத்து திருடிய தம்பி, அவர் மனைவி எல்லாம் இருந்தார்கள். வீட்டிற்கு அருகே என்றோ விவசாயத்திற்காக வெட்டப்பட்ட வாய்க்கால் ஒன்று, இன்று சாக்கடையாகி இருந்தது. அது மெளனமாக ஓடிக்கொண்டிருந்தது.

அப்போது ராஜு சித்தப்பா சொல்லிக்கொண்டிருந்தார். நாங்க வேலை செய்யுற எடத்துக்கு பக்கத்துல சுடுகாடு இருக்கும். பாத்தா தெரியும். அவ்வளவு பக்கத்துல, பெருமிதமாக. அம்மா தூங்க சொல்லிக்கொண்டே இருந்தார்கள். எப்படி உறக்கம் வரும்? நேற்று வரை பத்து பேர் இருந்த வீட்டில் இனி ஒன்பது பேர் தான். எல்லோருக்கும் சளி; முகம் வீங்கி இருந்தது.

நாளைக்குப் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். எல்லாம் முடிந்து விட்டது. என் நினைவில் உள்ள முதல் மரணத்தில் பாதிக்கப்பட்டோர் என்று யாரையும் சொல்லி விட முடியாது. தாத்தா இருந்ததால் ரொம்ப தெரியவில்லை. எல்லாம் சாந்தமாகி அடுத்த நாள் பள்ளிக்கும் சென்றேன்.

அந்த அரையாண்டுத் தேர்வுக்குப் படிக்கவே இல்லை. கவலை இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் காரணம் இருந்தது. பாட்டி போயிட்டா. தமிழ் மிஸ்ஸுக்கு மட்டும் அந்த காரணம் வேலிட்டாகத் தெரியவில்லை.

பல நாட்கள் வாசலில் இருந்த அந்த மஞ்சள் நிற பூப்பூக்கும் மரத்தில், பாட்டியின் உடலின் மிச்சம் ஒரு மண்பானையில் தொங்கிக்கொண்டிருந்தது. அவள் உயிரும் அதிலேயே இருப்பது போல ஒரு துணியை வைத்து இழுத்துக் கட்டியிருந்தார்கள். ராமேஸ்வரம் சென்று, கடலில் அதை இடும் வரை, அது அங்கேயே தான் இருந்தது. பதினாறு நாள் அதைப் பார்த்தால் அவள் ஞாபகம் தான் வந்தது.

எந்த ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டிலும் ஒரு குழந்தைப் பிறந்தால், இறந்து விட்டவர்கள் மறுபடி பிறப்பது போன்று அந்த வீட்டில் உள்ளோருக்கு ஒரு நிம்மதி. அதில் அவர்களுக்கொரு ஆனந்தம். அப்படி தான் என் கடைசி சித்தப்பாவிற்கு குழந்தை பிறந்த போது எல்லோரும் நினைத்தார்கள். அம்மணி அம்மாவே பிறந்திருப்பதாக சொன்னார்கள். ஆனால் இந்த அம்மினிக்கு கம்சனை தெரியாது; மஹாபலியைத் தெரியாது. அவளுக்கு சொல்ல அம்மிணியும் இல்லை.


இன்றும், எட்டு வருடங்கள் கழித்து, அம்மிணி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற தருணங்கள் வருவதுண்டு. அம்மாவுக்காக, அவள் மகிழ்ச்சிக்காக வாழ்ந்த ஒரு சிலர் நிலை எப்படி இருக்கும் என்று தெரியாது. இரவு உணவு சப்பாத்தியாக இருக்குமாயின், அதை நான் தனியே உண்பேனாயின், அருகில் என் பாட்டி இருப்பது போல் தோன்றும். குளிருக்காக கம்பளி போர்த்தும் போது, விதுரன் பற்றி ஆழ்ந்து படிக்கும் பொழுது, வாக்கிங் செல்லும்போது, பி.பி. செக் செய்யும் பொழுது, கடைசி சித்தப்பா குழந்தையுடன் பேசும்போது – அம்மணி எங்கள் மத்தியிலே தான் வாழ்கிறாள்.

Monday, November 12, 2012

வாசகனாவது சுலபம்

உறவுகள் கசந்துபோன ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சிதறுண்ட குடும்பத்தின் கதையே நம் காலத்தின் அடையாளம்.

இப்படி முன்னுரை எழுதி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, என்னை வாசிக்க வைக்கிறார் எஸ்.ரா. "புத்தனாவது சுலபம்"  எங்களுக்குள் - அதாவது எனக்கும் Siva வுக்கும் இடையே - ஒரு ஃப்ரேஸ்ஸாக இருந்தது. விவரிக்க முடியாத இடங்களில் ஒரு நிரப்பியாக பயன்படுத்திக் கொண்டிருந்தோம். சிரிப்பிற்கும். சோகத்திற்கும்.



இந்த புத்தகத்தின் முதல் கதை சிறப்பு. ஒரு பெண்ண போலீஸ், அவளுடைய வாழ்க்கை; ஒரு நாள் கதை. மேஜிக் போல சொல்கிறார் எஸ்.ரா. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னால் எழுதிட முடியாது என்று நினைத்த ஒரு வகையறா கதை அது. பெண்களின் கஷ்டம் பற்றியும், கூட்டங்களில் இருக்கையில், ஒரு நான்கு பேர் கூடி நிற்கும் இடத்தில் பீரியட் வரும்பொழுது ஏற்படும் மனோமாற்றங்களையும் அழகாய் எடுத்து சொல்லுகிறது இந்த கதை.

இரண்டாவது தான், "புத்தனாவது சுலபம்". படித்துவிட்டு Siva விற்கு கால் செய்தேன். என் மொபைலில் அறுபது பைசா பாலன்ஸ் இருந்தது. சிவாவை அழைத்து எனக்கு அழைக்கும் படி சொல்லி இந்த கதை பற்றி பேசிக்கொண்டிருந்தேன். மணி இரவு பன்னிரெண்டைத் தாண்டியிருந்தது. அந்த கதை என்னை அவ்வளவு பாதித்திருந்தது. அருமையான கதை. எந்தவொரு வீட்டிலும் இருக்கும் கதை. அதனாலேயே மிகவும் பிடித்திருந்தது. முக்கியமாக:
-->பைக் ஓட்டுனா தப்பா என்ற கேள்விக்கு இன்றைக்கும் என்னிடம் சரியான பதில் இல்லை
-->பையன்களுக்காகப் பொய் சொல்வதை அம்மாக்கள் விரும்புகிறார்கள். அது ஒரு சதி
-->இந்த உலகில் காதலைத் தவிர வேறு எதர்க்காவது பையன்கள் இப்படி உருகி உருகிக் கதறுவார்களா என்ன. அப்படி என்ன இருக்கிறது காதலில். (இவரது காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது)
இப்படியாக ஒரு தந்தைக்கும் பிள்ளைக்கும் இடையே உள்ள அந்த நெருக்கத்தையும், தூரத்தையும் அசாத்தியமான இயல்புடன், நடப்பதை அப்படியே ஸிம்பிளான தமிழில் கூறுகிறார் எஸ்.ரா.

மூன்றாவதாக இருந்த கதையை பற்றி சொல்லும் முன்... எஸ்.ரா கடல் பற்றி எழுதியிருப்பதை வாசித்தவரா நீங்கள்??? அப்படியானால், உங்களுக்கு அது பிடிக்குமா??? அவருடைய கடல் பற்றி எழுதும் நேர்த்தியை கண்டு வியப்படையாதவரா நீங்கள்??? இல்லையெனில், நீங்கள் இன்னும் அவர் எழுத்துக்களை நிறைய படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். "யாமம்" படித்த பிற்பாடு ஏனோ எஸ்.ரா எழுதும் கடலை படிக்கவே ஆசையாக உள்ளது, கடற்கரைக்கு போவதை விட. இந்த "பெண் என்று எவருமில்லை" என்ற சிறுகதை அப்படித்தான். கடலைப் பற்றிய எழுத்திர்க்காகவும், ராபி என்ற கதாப்பாத்திரமும் என்றும் என் மனதில் நிற்பவை. என் மனதில் என்றல்ல. யார் மனத்திலும்.

அடுத்ததாக, தமிழக இலக்கியத்துக்கு அதிகம் பழக்கப் படாத, ஐரோப்பிய வரலாறு சார்ந்த கதை. எனக்கிது மிகவும் பிடித்த கதைகளுள் ஒன்று. "தண்டனை முடிவு செய்தபிறகு அதை நிறைவேற்ற காரணம் தேடுவது தானே அதிகாரம்" - பட்டாசு. ப்ருனோ பற்றி விக்கிபீடியாவில் பார்த்ததே இந்த கதையைப் படித்த பின்னர் தான். இது ஒரு ஐ-ஓப்பனர். நல்ல விவாதம். மதம் எப்படி அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஒரு தடையாக இருந்தது என்பதர்க்கான ஒரு எடுத்துக்காட்டு. இந்த கதையில் வரும் அனைத்தும் வரலாறு ரீதியாக உண்மையே. இறுதியாக ப்ருனோ இவர் தான் என்றொரு பின்குறிப்பு போல எழுதியிருப்பது, சிரிக்க வைக்கிறது.

"ஜன்னலைத் தட்டாதே அஷ்ரப்" - என் ரேட்டிங்கில், இந்த புத்தகத்தில் நம்பர் டூ வில் இருப்பது. கதை சொல்லும் போது, கேட்கிறவனுக்கு கடுப்பு வரக்கூடாது. கேட்பவன் மனம் திறந்து, கதையை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அப்படிப் பட்ட ஒரு கதை. நீங்கள் நினைத்து பாருங்கள். உங்கள் வீட்டிற்கு உங்கள் சகோதரனின் தோழனோ யாரோ வருகிறார்கள். அவன் உங்கள் வீட்டை நன்றாக சுத்தம் செய்து, உங்கள் துணிகளைத் துவைத்து, எல்லாம் சுத்தம் செய்து, உங்களோடு பேசி கலையில் ஏதோ அன்றாட செலவுக்கு எதையோ திருடிச் செண்டு விடுகிறான். அப்படி இருந்தால், எப்படி இருக்கும்??? ஆடு போன்ற ஒருவன் தான் அஷ்ரப். அவனுக்கு வெட்கம், மானம் எல்லாம் கிடையாது. அவன் இப்படியே அலையும் ஒருவன். இந்த கதை மூலம், நாம் ஒவ்வொருவரும் இருக்க விரும்பும் ஒரு மனிதனை போல அஷ்ரஃபை சித்தரிக்கிறார். அருமையான கதை.

"ஜெயந்திக்கு ஞாயிற்றுகிழமை பிடிப்பதில்லை" - ஒரு சைவப் பெண் காதல் திருமணம் செய்து கொள்கிறாள். அவளுடைய கணவன் வீட்டில் ஞாயிற்றுகிழமை அசைவமின்றி அஸ்த்தமிப்பதில்லை. இந்த கதையின் வேடிக்கை என்னவென்றால், காதலிக்கும் போது பெரிதாய் தெரியாத பல விஷயங்கள், திருமணதிற்கு பின் மாறி விடுகிறது என்பது தான். எழுத்தாளரும் அதை தான் சொல்ல விரும்புகிறார். பெண் எவ்வளவோ த்யாகங்கள் செய்கிறாள் ஒரு திருமண வாழ்விற்காக என்பதையே சொல்லி இருக்கிறார். இது விகடன்-இல் வெளிவந்தபோது, பிரபு சொன்னார், "நல்ல கதை. இப்டி ஒரு கான்செப்ட்-அ எடுத்து எழுதியிருக்குராறு பாரேன்" என்று. சரி தான். அதில் அசைவம் என்பதை விட, காதலுக்கு முன், கல்யாணத்திற்குப் பின் என்ற அந்த சிந்தை - அருமை. சத்யப்ரபா அவர்கள் நான்-வெஜ் ஓ என்னமோ???

மற்ற சிறுகதைகள் எல்லாம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. "சொர்ணத்து ஆச்சிக்கு மன்மோகன்சிங்கைப் பிடிக்காது", என்ற கதை ஒரு ஹாஸ்ய நடையில் எழுதப்பட்டிருந்தது. சிரித்தேன்.

ஏனோ, "பொய்த்தொண்டை", "நடுவில் உள்ளவள்", "சொந்தக்குரல்", "சிற்றறிவு" - இந்த கதைகள் எல்லாம் நன்றாக இருப்பினும், வெகுவாக பிடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதில் எல்லாம் எதோ ஒரு சமூஹ சிந்தனை, குடும்ப பிரச்சனைகள் எனப் பல விஷயங்கள் இருக்கின்றன. நல்ல கதைகள் தான். நீங்கள் படித்து பாருங்கள், உங்களுக்கு பிடித்தாலும் பிடிக்கும்.

'சிறுமீன்' என்ற குறுங்கதை எனக்கு நிஜமாக புரியவில்லை. ஒரு பக்கம் தான் கதை. அதை தான் முதலில் படித்தேன். அப்பீலிங்காக இல்லை. நீதி சொல்கிற கதை போல...

"கொகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது" - ஆசிட் ஊற்றப்பட்ட முகம் கொண்ட ஒரு பெண்ணின் மனதிலிருந்து எழுதப்பட்டிருக்கும் இந்த கதை, நேர்த்தியாக இருந்தது. இயலாமையின் முழு வடிவமாக கொகிலவாணியைச் சித்தரித்திருக்கிறார். நல்ல எழுத்து, நல்ல நடை. ஆனால் பயத்தின் சின்னமாகவோ, கொடூரத்தின் உண்மையாகவோ இது நம் மனதில் பதிவதால் மறக்கவே நினைக்கிறோம் இக்கதையை.

இறுதியாக சீட்டாட்டம். இந்த கதையும் ஏனோ எனக்கு பிடிக்கவில்லை. அவர் எதையோ உவமையாக கூற விரும்புகிறாரா, இல்லை எனக்கு புரியும் மச்சூரிட்டி இன்னும் வரவில்லையா என்று எனக்கு புரியவில்லை.

இப்படியாக இந்த சிறுகதைத்தொகுப்பு அற்புதமான கதைகளைக்கொண்டது. சாஹித்ய அகாடமி விருது எஸ்.ரா விற்கு இதற்காக கொடுத்துவிடாதீர்கள். ஏற்கனவே பாவேந்தருக்கு நாடகத்திற்கும், கவியரசுக்கு புதினத்திற்கும், கவிப்பேரரசுக்கும் புதினத்திற்கு கொடுத்தது போதும். எஸ்.ரா. கதை சொல்கிறார் அற்புதமாக. ஆனால் அவரின் கட்டுரைத்தொகுப்பிர்க்கு இது ஒரு ஈடு அல்ல.

Tuesday, June 26, 2012

சூரியா


கல்லூரிக்கு முதல் நாளாக செல்கிறேன். இவன், இதோ எங்கோ பார்த்துக்கொண்டு ஸ்கூலுக்கு செல்வது போல் பேக் மாட்டிக் கொண்டு, வகுப்பிற்குள் நுழைகிறான். சற்றே வயதான ஆள் போல தோற்றமளிக்கிறான். மெதுவாய் நடக்கிறான். மூன்றாவது வரிசையில் அமர்கிறான். விளங்குகிறது: பெரிய படிப்பாளி அல்ல; மக்கும் அல்ல. யாரிடமும் பேச விருப்பப்படாதவன் போல், இதோ... அமைதியாய்... எங்கோ பார்த்துக்கொண்டு... இவன் தான் சூரியா. சூரிய பிரகாஷ்.

முதலாம் ஆண்டு என்பதால் எல்லா வகுப்புகளும் நடக்கும். பொறியியல் என்றாலும், கஷ்டமாய் ஒன்றும் இல்லாதளவு, எளிதான பாடங்கள் – டிராயிங் தவிர. டிராயிங் என்றாலே எரிச்சலாக வரும். அதற்க்கு பரிமளா என்று ஒரு நான்கு அடி ஐந்து அங்குல டீச்சர் வேறு. கணிதம் பலர் கஷ்டப்பட்டு படித்தனர். டிராயிங் – அய்யகோ தான்.

எங்கள் வகுப்பு முதலாம் ஆண்டிலே கொஞ்சம் டெர்ரர். பல விஷயங்களில் மாட்டிக் கொண்டதால், இருபது எம் ஒன் அர்ரியர். கல்லூரியில் மதிப்பெண்ணுக்கு பெரிய மதிப்போன்றும் இல்லை. பாஸ் ஃபெயில் என்ற இரண்டே பிரிவு தான். தன்னாட்சி (autonomous) என்பதால், ஆசிரியர்கள் கோவமெல்லாம் மதிப்பெண்ணிலும் இந்த பாஸ் ஃபெயில் மாற்றத்திலும் மட்டுமே பிரதிபலிக்கும். உங்கள் பெயர் வாத்தியாருக்கு தெரிந்திருந்தால், அது எப்படி என்பதை பொறுத்து.

சூரிய பிரகாஷ் பாஸ் தான். அம்பத்தாறு மார்க் - எம் ஒன்னில். அவனுக்கு அது ஒரு மதிப்பெண்ணாக தெரியவில்லை.

“நான் நல்லா தான் டா எழுதினேன். என்னமோ, கடமைக்கு மார்க் போட்ருக்காங்க?” – அவன்.

சரி தான் இவன் சொல்வது. கடமைக்கு தான் திருத்துவார்கள். இன்னொரு நல்லா எழுதினவனுக்கு ஃபெயிலே போட்டிருக்கிறார்களே என்று நாம் மனம் குளிர்ந்திட வேண்டும். ஆனால் சூரியா அப்படி விடவில்லை. ரீ-இவேலுவேஷனுக்கு விண்ணப்பம் செய்தான். எண்பதோ எவ்வளவோ வந்தது.

     “நான் எழுதினதுக்கு கூடவே போட்டிருக்கணும். ஏதோ கடமைக்கு திருத்தி போட்டிருக்கானுங்க!”. என்று கூறினான்.

இப்படியாக நம் ஐயா சூரியா, மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். சூரியா ஒரு டே-ஸ்காலர். அவன் வீடு கல்லூரியில் இருந்து நடக்கும் தூரம் தான். அதுவே அவனுக்கு மாணவர்களுடன் பழக ஒரு தடை போல் ஆனது. இரண்டாம் வருடம் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்க முயற்சித்து தோற்று, இரண்டாவதாக முடிந்து, எங்களுடன் ஒன்றானான்.

இரண்டாம் ஆண்டு நாங்கள் படிக்கும் பொழுது ஒரு விடுதி தான் இரண்டாம் ஆண்டிற்கு. அதனால், மூன்று பேர் தங்குவதற்கு இடம் போதாதென்கிறது போன்ற இடத்தில், மூன்று பேர் தங்குமாறு ஆயிற்று. சூரியா அனைவருக்கும் நண்பன். வந்து விடுதியில் தங்கி, இரவுறங்கி என பல இருவுகளை விடுதியிலும் கழித்திருக்கிறான்.

ஒரு மனிதன் எப்படி எல்லோருடனும் நண்பனாக இருக்க முடியும் என்பதை, இவன் சுய சரிதை எழுதினால் தான் தெரிந்துகொள்ள முடியும். யாராவது புத்தகம் பற்றி பேசினால் அவன் புத்தகம் பற்றி பேசுவான். யாரேனும் சினிமா பற்றி பேசினால், சினிமா பற்றி... கிரிக்கெட், ஃபுட்பால், பொறியியல், நவீன தொழில்நுட்பம், இலக்கியம், பத்திரிகைகள், காதல், திருமணம்... இன்னும் என்னென்ன வகையறா உள்ளதோ, அவை அனைத்தும். முழுதாக தெரியவில்லை என்றாலும், மற்றவர்களை பேச வைத்து கேட்டு தெரிந்து கொண்டேனும், அடுத்த முறை அந்த தலைப்பில் பேசுகையிலே நன்றாய், உற்சாகமாய், நிறைய பேச வைக்கும் விதத்தில் பேசுவான்.
எல்லோருக்கும் பிடிக்கும் என்றாலே பொறுப்புகள் அதிகமாகி விடும். சுதந்திரம் இருக்காது. நான் இவனுக்கு ரொம்ப நெருக்கமில்லை. தூரமுமில்லை. ஹாய்-பாய் ரக நட்பும் அல்ல. எல்லா நாளும் அழைத்து பேசும் வண்ணம் ஒரு நட்பும் அல்ல. இவன் தோழன். நல்லவன். டிராவிட் மற்றும் கமலஹாஸன் ரசிகன். என் நெருங்கிய எதிர்பால் உறவுகள் பற்றி இவனுக்கு தெரியும். நிறையவே.

எங்கள் கல்லூரியில் ஈ.ஸீ.ஈ டிபார்ட்மென்ட் பக்கத்திலே ஒரு அருமையான இடம் உண்டு. நாட்டாமைகளின் ஆலமரத்தடி போல சிமென்ட் பென்ச் இருக்கும் அங்கே, இரண்டு பழைய காலத்து போர் வாகனங்கள் நிற்கும். அர்ரியர் பாலா என்று அறியப்பட்ட பாலசுப்ரமணியன் எனற ஜியாலஜி வாத்தியார் அறை அங்கு தான் இருந்தது. இரவு அங்கே அருமையாக இருக்கும். உக்கார்ந்து கதை பேசி கதை பேசி தீராத தருணங்கள் அங்கே பல முறை முளைத்திருக்கிறது. எனக்கு தெரிந்த ஒரு நல்ல காதலின் ஆரம்ப கால நான்கு மணி நேர தொலைபேசி பேச்சுவார்த்தையும் அங்கே தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் பேசுவதை கேட்க ஆளில்லை என்று நினைக்கும் ஒவ்வொருவருக்கும் சூரியா நல்ல துணையாக இருந்தான். மனிதனின் மோசமான காலகட்டங்களில் அவனுடன் இருப்பவனை விட, அவன் சந்தோஷத்தை கண்டு சந்தோஷப் படுபவர்கள் கிடைப்பது தான் கஷ்டம். பிறர் நல்வாழ்வைக் கண்டு பொறாமை கொள்வோர் தான் அதிகம் இங்கே. சும்மா, காதலில் வெற்றி என்று சொல்லிப் பாருங்கள், எத்தனை பேர் சிரிப்பார்கள், தொடர்ந்து முன் போலவே நடந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை. இவன் சிரிப்பான். உறவை மேம்படுத்த டிப்ஸ் கொடுப்பான். அழுக்கற்ற உள்ளம்.
ஒரு முறை டிராபிக் போலீஸிடம் மாட்டிக் கொண்டான். மறந்துவிட்டேன். அவனிடம் ஒரு ஸ்கூட்டர் உள்ளது. அதை யாரும் அவ்வளவு எளிதில் ஓட்டி விட முடியாது. அதை அவன் ஓட்டும் அழகே தனி. அதன் சத்தமும், அதை ஸ்டார்ட் செய்ய அவன் படும் பாடுமே தமாஷ் தான். அதற்க்கு ஒரு ஹெல்மெட் வேறு வைத்திருப்பான்.
“தம்பி, ஹெல்மெட் எங்க?”
“இல்ல ஸார்”
“லைசன்ஸ்?”
“இல்ல ஸார்”
“வண்டி பேப்பர்ஸ்??”
“அதுவும் இல்ல ஸார்”
போலீஸ் நீண்ட நேர மனக்கணக்கிற்க்கு பிறகு, “ரெண்டாயிரம் ரூபாயாகும்”
“இந்த வண்டியே அவ்வளவு தான் ஆகும்”
ஏதோ, இருக்கும் கொஞ்ச நல்ல போலீஸ்களில், ஒரு போலீஸ் இவர். விட்டுவிட்டார்.

அவன் அப்பா, நாங்கள் மூன்றாமாண்டு படிக்கையில் இறந்து போனார். அவனைக் கண்டு நான் வியந்தேன் என்று தான் சொல்லிட வேண்டும். ரொம்பவும் சுய நினைவுடன், மிக சாந்தமாக இருந்தான். வேட்டி கட்ட தெரியவில்லை என்று சிரித்து கொண்டிருந்தான். நான் தான் அவனுக்கு வேட்டி கட்டி விட்டேன். அவன் அப்பாவுக்கு புற்று நோய். பல நாட்கள் கழித்து கேட்ட போது, “எதிர் பாத்தது தான் மச்சான்” என்றான்.

சூரியாவைப் பற்றி சொல்லும் யாரும் அவன் அம்மாவைப் பற்றி கண்டிப்பாய் சொல்லாமலிருக்க மாட்டார்கள். சூரியா அம்மாவை எனக்கும் பிடிக்கும். எனக்கு நெறைய நாட்கள் தோசை ஊத்தி கொடுத்திருக்கிறார்கள். எங்களுடன், சூர்யாவை விட சகஜமாக பேசுவார்கள். காதல் பற்றி, இந்த காலத்து பெண்கள் பற்றி எல்லாம். சூரியா அவன் அம்மாவிடம் எல்லாவற்றையும் சொல்லி விடுவான். என் எதிர்ப்பால் உறவுகள் பற்றியும் சொல்லி இருப்பான். என்னிடம் அவர்கள் ஓரிரு முறை கேட்டதும் உண்டு. இன்னும் ஒரு சிலருக்கோ, சூர்யாவை விட, சூரியா அம்மாவை ரொம்ப பிடிக்கும்.

கொஞ்சம் நாட்கள் எங்கள் ப்ளேஸ்மென்ட் ரெப்ரெஸன்டேடிவாக இருந்தான். பிறகு குடும்ப சூழல், அது இது என்று சில காரணம் வந்து எல்லாம் மாறி விட்டது. அவனும் நல்ல ஒரு மின்னணுவியல் துறை சார்ந்த ஒரு கம்பனியில் வேலைக்குச் சேர்ந்தான். அம்மா அவனோடு தான் இருக்கிறார். நன்றாக பார்த்து கொள்கிறான்.

சமீபத்தில் அம்மா சென்னை வந்திருந்த பொழுது, என்னோடு பேசிக்கொண்டிருந்தார்கள். “அவனுக்கு நான் இப்போ ஒரு எக்ஸ்ட்ரா லோட் மாதிரி. உங்கள மாதிரி பேச்சலர் லைஃப் அவனுக்கு கெடைக்கல. என் ஆசை இதான். ‘பை’ல காசு வசுருக்கணும். நெறைய. இப்பிடியே போய்டே இருக்கணும். எண்ணாம செலவு செய்யணும். இப்போ கெடச்சுருக்கு”. எல்லோரும் எல்லோருக்கும் சுமை தான். பேச்சலர்க்கு அந்த வாழ்க்கை சுமை. இப்படி இருக்கும்போது இது சுமை. அப்படி இருக்கையில் அது சுமை. அம்மா கண் நிறைந்து இருந்தது. அவர்களே துடைத்துக் கொண்டார்கள்.
“எல்லாம் சரி ஆய்டும் ம்மா”, என்று சொல்லி சமாதானம் செய்ய முயற்சித்தேன். இன்றும் பேசுகையில், “அம்மா கிட்டயும் சொல்ல முடியாத சில விஷயங்கள் இருக்கும். அந்த மாதிரி நெலமையில என்ன சித்தியா நெனச்சுக்கோ” என்று சொல்லும் சூரியாவின் அம்மா எங்கள் ஒவ்வொருவருக்கும் அம்மா தான்.

தொலைத்தொடர்பு வளர்ந்து விட்டதால் இன்றும் அவனுடன் பேசும் இனிமை கிடைக்கிறது. சேட், ஃபோன் கால், எஸ்.எம்.எஸ்.... ஆனால், பலராக சென்னைக்கு வந்த எங்கள் வகுப்பில் இவனும் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்கிற லிஸ்டில் இவனுக்கும் ஒரு இடம் உண்டு.

சொல்ல இன்னும் எவ்வளவோ பாக்கி இருக்கிறது. இவனுடைய அரை-நிர்வாண புகைப்படம், என்னுடைய முதல் வாசகன், பார்த்து டெஸ்ட் எழுதாத ஒரே ஆள், அவனுடைய வண்டிகள், அவனுடைய டிஃபன் கேர்ரியர், அப்பா, வீடு, கிரிக்கெட் ஆட்டங்கள், ஆச்சி மெஸ், மீசை, வாக்குவாதங்கள். இன்னும் எவ்வளவோ. இந்த கதை, இத்துடன் முடியவில்லை. சூரியா ஒவ்வொரு நாளும் உதிக்கிறான், இந்த தேவா மனதில்.

Wednesday, April 11, 2012

கெட்ட வார்த்தை



“எனக்கொரு சந்தேகம்”
“கேளேன்???”, புன்னகையுடன் அவள்.
“பொண்ணுங்க எல்லாம் கெட்ட வார்த்தை பெசுவாங்களா???”
“ம்…”, யோசிப்பது போல் பாவனை செய்தாள். “சிலர்…” என்று இழுத்தாள்.
“உனக்கு தெரிஞ்சு???”
“ஆங்ங்??.. நல்ல கேள்வி.. இதுக்கு பதில் சொல்வேன் னு நீ நெனக்குறியா?”
சிரித்தேன். ‘சொல்ல முடியாது‘ என்பதை எனக்கு வலிக்காமல்எவ்வளவு அழகாய் சொல்லி விட்டாள் இவள். என் தோழி. தேன்மொழி.
மாநிறம். சற்றே உயரம, ஒற்றை ஜடை, ஒக்கேஷனலி மல்லிச்ச்சரம் ஏறும் கூந்தல், பெரிய கண்கள்… பெண்ணுக்கு இலக்கணம் இல்லை, என்றாலும் பெண் என்ற பிரிவினையுள் அடங்கும் வண்ணம் அழகாய்…
“சரி அதிருக்கட்டும்… ஒன்னு கேக்கணும்…”
“கேளேன்??”, புன்னகைத்தாள். அவள் ‘கேளேன்’ என்பதில் ஒரு அழகு உண்டு. அந்த ‘க’கரத்தை சற்றே அழுத்தி, ‘ஏ’காரத்தை இழுத்து, ‘ன்’-ஐ ‘ங்’ ஆக்கி, ‘க்கேஏளேங்’ என்பது போல் ஒலிக்கும்.
“உனக்கு கெட்ட வார்த்தைகள் ஏதாவது தெரியுமா?”
சிரித்தாள். புன்னகைத்தாள்… வெட்க்கப்பட்டாள்…
“நான் லாம் பேச மாட்டேன் பா”, என்றாள். அந்த ‘பா’ – முன்னிலை ஒருமையாய் ஒரு புதிய ஆண்-பெண் நட்பில் வரும் ‘பா’ அல்ல. யாரோ, மூன்றாவது மனிதனிடம் சொல்வது போல் அமைந்த ‘பா’. என்னை குறி வைத்து ஒரு சண்டையின் போது மூன்றாவது மனிதனிடம் சொல்வது போல் சொன்னாள்…
“நீ பேசுவியா னா கேட்டேன்??? உனக்கு தெரியுமா?”
“அதெல்லாம் சொல்ல முடியாது…”
“என்கிட்டே சொல்றதுக்கென்ன???” இது என் ஆயுதம். அவள் சரெண்டர் ஆகி விடுவாள் இப்படி கேட்டால்.
“அட போடா நீ வேற!”
“ஸ்கூல்-ல யே  தெரிஞ்சுருக்குமே??? உண்மையா சொல்லு”
“பேசுவாங்க… எனக்கும் தெரியும்.. தி வீ….”, தயங்கினாள்.
“தி???”
“தி வீடியோ மேன்… இத வேகமா சொன்னா, ஒன்னு வரும் ல? அது ஸ்கூல் ல பிரபலம்”, அவள் படித்தது பெண்கள் மேல் நிலை பள்ளி என்பது குறிப்பிட தக்கது.
“ஓஹோ! எது?? அந்த வார்த்தையா???”
“இல்ல… இப்படி சொன்னா, அப்படி வரும்… அது கெட்ட வார்த்த அப்டிங்கறது”
நான் சிரித்தேன். அவள், அவள் கன்னத்தில் விழுந்த சில முடிகளை எடுத்து காதிற்கு பின்னால் சொருகிக் கொண்டாள். தேநீர் கோப்பையை எடுத்து, ஒரு முறை தேநீரை ‘ஸ்ர்ர்ர்ர்’ என்று இழுத்தால். ஏதோ யோசனையில் ஆழ்ந்தாள்.
“என்ன யோசிக்கிற?”, அவள் யோசிக்க ஆரம்பித்தால் ஏதோ விபரீதம் நடக்க இருக்கிறது என்று அர்த்தம. எந்த பெண் யோசித்தாலும் அப்படித்தான். அதனால், சிந்தனையை கலைத்தேன்.
“இல்ல… ஏன் அப்படி ஒரு தொழில்?”
“எப்படி?”
“தி வீடியோ…”, இழுத்தாள்.
“சுஜாதா-வோட ‘எப்படியும் வாழலாம்’ சிறுகதை படிச்சதில்ல???”
“”இல்லை… யேன்???”, அவள் ‘ஏன்’ என்று கேட்க மாட்டாள். ‘யேன்’ என்பாள்… கேட்கவே யேதோ போல் இருக்கும்.. சிலிர்ப்பாய்…
“உனக்கு கம்ப்யூட்டர் பத்தி தெரியுது. அவங்களுக்கு அது தான் தெரியுது. அப்படி ஒரு தொழில்”
“இது ஒரு ஜஸ்டிஃபிகேஷனா?”
“ஜஸ்டிஃபிகேஷன் இல்ல. ஆனா, அப்படி பார்க்க போனா, சரி தானே?”
“என்னமோ… எனக்கு தெர்ல”
மீண்டும் தேநீர் இழுத்தால். அவள் கண்கள் எதையோ கேட்க தயங்குவது போல் இருந்தது.
“என்ன? கேளு…”, நான் சொன்னேன்.
அவளுக்கு தெரியும், நான் கண்டுபிடித்து விடுவேன் என்று.
“அதில்ல… ஏன் ஆண்கள் அங்க போகணும்??? அப்படி என்ன அவுங்களுக்கு அப்படி ஒரு அடக்கிக் கொள்ள முடியாத ஒரு …”
வெற்றிடம்…
கேட்டுவிட்டாள்…
நான் தேநீர் கோப்பையை எடுத்து ஒரு இழு இழுத்தேன். ‘சரி காமெடியாவே அப்ரோச் பண்ணுவோம்…’, மனதில் நினைத்து கொண்டேன்.
“மனைவி திருப்திபடுத்தலைனா போவாங்க… இப்போ, உன் கல்யாணத்துக்கப்றம்…”, சிரித்து கொண்டிருந்த கண்கள், முறைத்தான.
“ம்… சொல்லு”, அதிகாரமாய் சொன்னாள்.
“..உன் கணவனும் போகலாம்… நீ…”
“எங்கே???” கேள்வியுடன், என் பேச்சை நிறுத்தி, முறைப்பின் காரத்தை கூட்டினாள்.
“ப்ராஸ்டிட்யூட் கிட்ட”
ஆங்கிலம் எவ்வளவு அழகிய ஒரு ஆயுதம்! எவ்வளவு கேவலமாம் வார்த்தையையும் அழகாய் சொல்லும் படி இருக்கின்றது?!?
“ஓஹோ! அப்ப பெண்கள் லாம் என்ன செய்றதாம்???”
“தெரியல…”
“அவுங்களுக்கெல்லாம் எதிர்பார்ப்பு இருக்காதா???”
“அதிகமான எதிர்பார்போட இருக்கிறது பெண்கள் தான்…”
“ஆமா.. எதிர்பார்ப்பு அதிகமா தான் இருக்கும். இந்த வசதி எல்லாம் இல்ல பாருங்க!”
பாருங்க-வில் வந்த ‘ங்க’ மரியாதை அல்ல. கான்வர்ேஸஷனில், பலபோதும் ஆண்களிடம் பொதுவாக ஏதேனும் சொல்ல விழைந்தால், இப்படி தான் சொல்வாள்.
சிறு மௌனம் நிலவியது.
அவளே அம்மௌனத்தை கலைத்தாள்.
“ஆமா… ப்ராஸ்டிட்யூட் கிட்ட போறாங்களே, அவுங்கெல்லாம் அப்டினா மேல் ப்ராஸ்டிட்யூட்ஸ் தானே?”
என் தேநீர் கோப்பையை எடுத்து தேநீரை இழுத்தேன். காலி ஆகி இருந்தது. காற்றை இழுத்தேன்.
அவள் கேள்வியின் உறைப்பு இப்பொழுது தான் மூளையில் மெதுவாக இறங்கியது.
“ஆமா… இல்ல.. தெரியல… இருக்கலாம்…”, உளறினேன். உரக்க சிரித்தாள். அந்த கடையில் இருந்த இருவர், திரும்பி என்னையே பார்த்தார்கள்…
பில் பே பண்ணிட்டு வெளிய வந்தோம்.
“நான் வேற யார்ட்டயும் இப்படி பேசுறதில்ல”, நான்…
“ஆமா, நாங்க தெனமும் ஒரு நூறு பேர்ட பேசறோம்… போ ல..”

“என்னமோ… யார்க்கு தெரியும்…”, நான் முன்னால் ஓட, அவள் துரத்திக் கொண்டு வந்தாள்.